'அனில் கும்ப்ளே ரொம்ப ஸ்ட்ரிக்ட்! அவருடன் அணி வீரர்கள் மகிழ்ச்சியாக இல்லை!' - வினோத் ராய்

'அனில் கும்ப்ளே ரொம்ப ஸ்ட்ரிக்ட்! அவருடன் அணி வீரர்கள் மகிழ்ச்சியாக இல்லை!' - வினோத் ராய்
'அனில் கும்ப்ளே ரொம்ப ஸ்ட்ரிக்ட்! அவருடன் அணி வீரர்கள் மகிழ்ச்சியாக இல்லை!' - வினோத் ராய்

“அனில் கும்ப்ளே ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனவர், அதனால் அவர் பயிற்சியாளராக இருக்கும்போது அணி வீரர்கள் மகிழ்ச்சியாக இல்லை” என்று முன்னாள் பிசிசிஐ நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய் சமீபத்தில் வெளியிடப்பட்ட அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிசிசிஐ நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய் சமீபத்தில் “நாட் ஜஸ்ட் எ நைட்வாட்ச்மேன்: மை இன்னிங்ஸ் வித் பிசிசிஐ” என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே நடந்த பனிப்போர் குறித்து பல தகவல்களை விரிவாக எழுதியுள்ளார். 2016 ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஓராண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

“கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்துடனான உரையாடல்களில், கும்ப்ளே மிகவும் ஒழுக்கமானவர், கண்டிப்பானவர். அதனால் அணி வீரர்கள் அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக இல்லை. இந்தப் பிரச்சினையில் நான் விராட் கோலியிடம் பேசியிருந்தேன். அவர் கும்ப்ளேவுடன் பணிபுரிந்த விதத்தால் அணியின் இளைய உறுப்பினர்கள் பயமுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோர் அடங்கிய அப்போதைய கிரிக்கெட் ஆலோசனைக் குழு கும்ப்ளேவை மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பரிந்துரை செய்தது. இருப்பினும், கோஹ்லியின் பார்வைக்கு அதிக மரியாதை கொடுக்கப்பட்டது. எனவே கும்ப்ளேவின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாததாக மாறியது என்பது பின்னர் நடந்தவற்றிலிருந்து தெளிவாகத் தெரிகிறது” என்று வினோத் ராய் எழுதியுள்ளார்.

“கும்ப்ளே இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பிறகு நாங்கள் அவருடன் நீண்ட நேரம் உரையாடினோம். முழு அத்தியாயமும் நடந்த விதம் குறித்து அவர் வெளிப்படையாகவே வருத்தப்பட்டார். அவர் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக அவர் உணர்ந்தார். மேலும் ஒரு கேப்டனுக்கு அணி நிர்வாகம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று வருந்தினார். அணியில் ஒழுக்கம் மற்றும் தொழில்முறையை கொண்டு வருவது பயிற்சியாளரின் கடமை. மூத்தவராக அவரது கருத்துக்கள் வீரர்களால் மதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கும்ப்ளே கூறினார். அவரது வழிகாட்டுதலின் கீழ் அணி எவ்வாறு செயல்பட்டது என்பதில் குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது” என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் வினோத் ராய்.

“இருப்பினும், கோஹ்லி மற்றும் கும்ப்ளே இருவரும் இந்த விவகாரத்தில் கண்ணியமான மௌனத்தை கடைப்பிடிப்பது முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் உள்ளது. இல்லையெனில் சர்ச்சை தொடர்ந்திருக்கும். உண்மையில் முன்னாள் கேப்டன் கோலி கண்ணியமான மௌனத்தை கடைப்பிடிப்பது மிகவும் புத்திசாலித்தனம். அவரிடமிருந்து எந்த ஒரு பேச்சும் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும். கும்ப்ளே, அவரது பங்கிலும், நிதானத்தை கடைப்பிடித்து, நடந்த எந்தப் பிரச்சினையையும் பகிரங்கமாகச் செல்லவில்லை. அதுவே சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் விரும்பத்தகாத ஒரு சூழ்நிலையைக் கையாள்வதில் மிகவும் முதிர்ச்சியான மற்றும் கண்ணியமான முறையாகும்” என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் வினோத் ராய்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com