2 வருடத்துக்குப் பின் வாய்ப்புக் கிடைத்தும் வீணாப்போச்சே: ’யோ யோ’வில் ராயுடுவும் அவுட்!
’யோ யோ’ உடல் தகுதித் தேர்வில் அம்பத்தி ராயுடு தோல்வி அடைந்ததால் இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து அவர் விலகியுள்ளார்.
குண்டூரைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. 32 வயதான இவர், கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்திருந்த இவருக்கு பின்னர் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக 2016-ம் ஆண்டு இந்திய ஒரு நாள் அணியில் இடம்பிடித்திருந்தார்.
ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயுடு, இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடிய ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியமானவராக இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மொத்தம் 602 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 149.75 ஆக இருந்தது.
இதையடுத்து இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நாள் போட்டிக் காக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த தொடரில் விளையாடும் வீரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக் கெட் அகாடமியில் நடந்து வந்தது.
இதில் இளம் வீரர் சஞ்சு சாம்சன், வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் யோ யோ உடல் தகுதி தேர்வில் வெற்றிப் பெறவில்லை. இத னால் ஷமி, ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சஞ்சு சாம்சன் இந்திய ஏ அணியிலும் இடம் பிடிக்கவில்லை. இந்நிலையில் இந்த உடல் தகுதித் தேர்வில் அம்பத்தி ராயுடுவும் வெற்றி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ’யோ யோ’வின் குறைந்தப்பட்ச தகுதி ஸ்கோர் 16.1 ஆகும். ஆனால் ராயுடு தோல்வி அடைந்தார்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு அணியில் வாய்ப்புக் கிடைத்தும் யோ யோ டெஸ்ட், அந்த வாய்ப்பை ராயுடுவிடம் இருந்து பறித்து விட்ட து. இதையடுத்து டி20 போட்டியில் இடம்பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா, அல்லது ரிஷப் பண்ட்டுக்கு அவரது வாய்ப்புக் கிடைக்கலாம் என்று தெரிகிறது.