ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணைவார் என பாஜகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் இந்தியாவின் தோல்வியைக் காட்டிலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவது தோனியின் ஓய்வு. கடந்த மூன்று நாட்களாக தோனி குறித்த ஹேஸ்டேக்ஸ் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகின்றன. பலரும் அவரது ஓய்வு குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், தோனி வழக்கம் போல் அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில் தோனியைச் சுற்றி தற்போது அரசியல் பேச்சுகளும் வரத்தொடங்கியுள்ளன. ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணையப்போகிறார் எனத் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பாஜகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான் அது குறித்து பேசியுள்ளார். பாஜகவில் தோனி இணைவார் என்றும் இது குறித்து பல நாட்களாக பேசி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியுள்ள அவர், பாஜகவில் தோனி இணைவது குறித்து அவரது ஓய்வுக்குப் பின்னரே தெரியவரும். தோனி உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர். அவர் கட்சியுடன் இணைவது குறித்து முயற்சி எடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தோனி சந்தித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோனி தற்போது ராஞ்சி பகுதியில் வசித்து வருகிறார். இந்த வருட இறுதியில் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தோனி பாஜகவில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.