தன் ரசிகர்களின் மத்தியில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவரை பார்க்க ஆவலுடன் 1400 கிலோ மீட்டர் தூரம் நடைவழி பயணமாக நடந்து வந்துள்ளார் தோனியின் ரசிகர் ஒருவர்.
இந்த நடைவழி பயணம் ஹரியானாவின் ஜலான் கெடா (Jalan Kheda) கிராமத்தில் துவங்கி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வந்து முடிந்துள்ளது. 18 வயதான அஜய் கில் தான் தோனியை நேரில் பார்க்க இப்படி வந்துள்ளார். சிறு வயது முதலே தோனியின் தீவிர ரசிகராம் அவர். முடிதிருத்தும் தொழிலை செய்து வருகிறாராம் அவர்.
இருந்தாலும் தோனியை பார்க்க வேண்டுமென்ற அவரது ஆவல் இன்னும் நிறைவேறாமல் உள்ளது. தோனி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட அமீரகத்தில் முகாமித்துள்ளார். அவர் ராஞ்சி திரும்ப மூன்று மாத காலம் ஆகும் என சொல்லப்பட்டுள்ளது. அதுவரை பொறுத்திருந்து அவரை பார்த்துவிட்டு தான் ஊர் திரும்புவேன் என முரண்டு பிடித்த அந்த பாசக்கார ரசிகருக்கு ராஞ்சி மக்கள் ஆறுதல் சொல்லி ஊர் திரும்ப விமான டிக்கெட் போட்டுக் கொடுத்துள்ளனராம்.