‘5 விக்கெட்டுகள்.. அள்ளி கொடுத்த ரன்கள்’ - ஷமியால் குழம்பிய மீம்ஸ் கிரியேட்டர்ஸ்
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மிகுந்த பரபரப்புக்கு நடுவே இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 337 ரன்கள் குவித்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக விளங்கியது பந்துவீச்சுதான். ஆனால், பும்ராவின் பந்துவீச்சை தவிர மற்றவர்களை இங்கிலாந்து வீரர்கள் பதம் பார்த்துவிட்டனர்.
முதல் 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் குவித்துவிட்டது. அதனால், அந்த அணி 375 ரன்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், இடையில் ஷமி அசத்தலாக பந்துவீசி பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன் விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால், ரன் வேகம் சற்றே குறைந்தது. ஆனால், கடைசி 10 ஓவர்களில் ஸ்டோக்சின் அதிரடியால் இங்கிலாந்து 98 ரன்கள் எடுத்தனர்.
பதம் பார்க்கப்பட்ட சுழற்பந்துவீச்சு
இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்துவீச்சு கொஞ்சம் எடுபட்டது. ஆனால், சுழற்பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. சாஹல் 10 ஓவர்கள் வீசி 88 ரன்கள் வாரி வழங்கினார். ஆனால், ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இவர் ஓவரில் மட்டும் 6 சிக்ஸர் விளாசப்பட்டது. அதேபோல், குல்தீப் வீசிய 10 ஓவர்களில் 3 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 72 ரன்கள் எடுக்கப்பட்டது. இருவரும் சேர்ந்து 20 ஓவர்களில் 160 கொடுத்தனர். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
5 விக்கெட்.. 69 ரன்கள் - ஷமி
இந்தப் போட்டியை பொறுத்தவரை தொடக்கத்திலேயே ஷமி ஓவரை அடித்துவிட்டர்கள். அதனால்தான் உடனடியாக சாஹலுக்கு கொடுக்கப்பட்டது. இடையில் ஷமி சிறப்பாக பந்துவீசினார். ஆனால், கடைசியில் ஷமி ரன்களை வாரி வழங்கினார். கடைசி இரண்டு ஓவர்களில் 17, 15 ரன்கள் கொடுத்தார். ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்து இருந்தாலும், 69 ரன்கள் விட்டுக் கொடுத்தது இந்திய அணிக்கு பாதகமாகவே முடிந்துவிட்டது. அதுவும், கடைசிக் கட்டத்தில் தொடர்ச்சியாக புல்டாஸ் பந்துகளை வீசி ரன்களை கொடுத்தார்.
மீண்டும் ஜொலித்த பும்ரா
இந்திய அணியைப் பொறுத்தவரை பும்ராவின் பந்துவீச்சு மட்டும்தான் மோசமானதாக இல்லை. முதல் மூன்று ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இடையில் பும்ரா ஓவரில் ரன்கள் அடிக்கப்பட்டது. இருப்பினும், கடைசி கட்டத்தில் ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். ஒரு விக்கெட் மட்டுமே அவர் எடுத்து இருந்தாலும், 10 ஓவர்களில் அவர் 44 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். சராசரி 4.40தான். மற்ற அனைவரும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளனர். பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள முக்கியமான இங்கிலாந்து பேட்ஸ்மேன்களே திணறினர்.
338 ரன் வரலாற்று சிறப்பு
இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து 338 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த 338 ரன்கள் என்பதில் ஒரு வரலாற்று சிறப்பு உள்ளது. 2011 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 338 ரன்கள் எடுத்தது. 339 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அதே 338 ரன்களையே எடுத்து போட்டியை டிரா செய்தது. இன்றைய போட்டியிலும் 338 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.