2019-ல் உத்வேகத்துடன் ஆடிய வீரராக விராட் கோலி தேர்வு
2019-ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருதுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
2019-ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கு, என்னென்ன விருதுகள் என ஐசிசி பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019-ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருதுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் உற்சாகப்படுத்துங்கள் என சைகை செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய புகாரில் ஓராண்டு தடை பெற்று களம் திரும்பிய ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் அவமதித்தபோது கோலி இவ்வாறு சைகை செய்தார்.
மேலும் உலகின் சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகின் சிறந்த ஒருநாள் போட்டி வீரராக ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணி வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக இந்தியாவின் விராட் கோலி தேர்வாகியுள்ளார். 2019 ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டி அணியில் கோலி, ரோகித் சர்மா, ஷமி, குல்தீப் ஆகிய 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் டெஸ்ட் போட்டி அணியில் கோலி, மயங் அகர்வால் ஆகிய இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.