உலகக் கோப்பை தோல்வியால் துவண்டுவிட வேண்டாம்: மகளிர் அணிக்கு பிரதமர் அறிவுரை
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் துவண்டுவிட வேண்டாம் என்று இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியிருக்கிறார்.
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது பிரதமர் மோடி இதைக் குறிப்பிட்டார். இந்திய மகளிர் அணி வீராங்கனைகளை சந்தித்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், உலகக் கோப்பையை வெல்லாத காரணத்தால், அவர்கள் மிகுந்த வேதனையுடன் இருப்பதாக நான் உணர்ந்தேன். அவர்களின் முகங்கள் வழியாக இந்த வேதனை வெளிப்பட்டதை நான் கண்டேன். எனவே நான் அவர்களிடம் கூறினேன், ஊடகங்கள் மிகப்பெரிய எழுச்சிகண்டுள்ள இந்த காலத்தில் உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கவே செய்யும். அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாவிட்டால், அது ஆத்திரமாக மாறக்கூடிய வாய்ப்பு உருவாகும். எனவே அதுகுறித்து அதிகம் சிந்தித்து மனஅழுத்தத்தில் இருக்க வேண்டாம்.
உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக மகளிர் கிரிக்கெட் அணியை மக்கள் பாராட்டினர். உலகக் கோப்பையை வேண்டுமானால் நீங்கள் வெல்லாமல் இருக்கலாம், ஆனால், 125 கோடி மக்களின் மனங்களை நீங்கள் வென்றுவிட்டீர்கள் என்று மகளிர் அணி வீராங்கனைகளிடம் கூறியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.