“2வது போட்டியிலும் ஜெயிப்போம்” - நியூஸி. கேப்டன் நம்பிக்கை
இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் வெற்றி பெறுவோம் என நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா-நியூஸிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், நாளைய போட்டியிலும் தோற்றால் கோப்பை நியூஸிலாந்து வசம் சென்றுவிடும்.
இதனால் நாளைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என முனைப்பில் இந்திய உள்ளது. அதேநேரம், தாய்மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில்தான் தோற்றுவிட்டோம், டி20 தொடரிலாவது வெல்ல வேண்டும் என நியூஸிலாந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் கடந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால், இந்தப் போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் எனப்படுகிறது. குறிப்பாக பந்துவீச்சை பலப்படுத்த குல்தீப், கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்படலாம்.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டி தொடர்பாக பேசியுள்ள நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், “கடந்த டி20 போட்டி சிறப்பான ஒன்று. இது அனைத்தையும் திருப்திபடுத்தும் வகையிலும் அமைந்தது. நாங்களும் இந்திய அணியும் திறமைகளை பரிமாறிக்கொண்டோம். இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியை எங்கள் வீரர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. அதன்படியே நாங்கள் வென்று முன்னேறிச்செல்வோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.