”தேர்வுக் கதவை சர்ஃபராஸ் கான் தட்டவில்லை உடைத்திருக்கிறார்" - ஆதரவுகரம் நீட்டிய அஷ்வின்!

”தேர்வுக் கதவை சர்ஃபராஸ் கான் தட்டவில்லை உடைத்திருக்கிறார்" - ஆதரவுகரம் நீட்டிய அஷ்வின்!
”தேர்வுக் கதவை சர்ஃபராஸ் கான் தட்டவில்லை உடைத்திருக்கிறார்" - ஆதரவுகரம் நீட்டிய அஷ்வின்!

இந்திய அணியில் மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாதது குறித்து தமிழக வீரர் ஆர்.அஷ்வின் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தம்மை ஒதுக்கி வைத்தாலும், மும்பை ரஞ்சி தொடரில் பட்டையைக் கிளப்பி வருபவர், சர்ஃபராஸ் கான். சமீபத்தில்கூட டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி தொடரில் மீண்டும் ஒரு சதத்தை அடித்து இந்திய அணியை திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனாலும், அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.

முதல்முறையாக பிசிசிஐ விளக்கம்

இந்த நிலையில், சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து முதல்முறையாக நிர்வாகம் பதிலளித்தது. சேத்தன் சர்மா தலைமையிலான புதிய தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருக்கும் அதன் உறுப்பினரான ஸ்ரீதரன் ஷரத், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அவர், அணியின் பட்டியலில் உள்ளார். அவருக்கான வாய்ப்பு வரும்போது, இந்திய அணியில் தேர்வு நிச்சயம் செய்யப்படுவார். தற்போது இந்திய அணியில் போட்டி அதிகமிருப்பதால், அதை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, சர்ஃபராஸ் கான் நடுவரிசை ஆட்டக்காரர். அந்த வரிசையில் இறங்கும் வீரர்கள்தான் இன்று நிறைய எண்ணிக்கையில் உள்ளனர். சிறந்த அணியைத் தேர்ந்தெடுக்கவே முன்னுரிமை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

ஆர்.அஸ்வின் கருத்து

இந்த நிலையில் சர்ஃப்ராஸ் கான் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆர்.அஷ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”சர்ஃப்ராஸ் கான் பற்றி நான் எங்கிருந்து சொல்லத் தொடங்குவது என்று தெரியவில்லை. அவர் அணியில் தேர்வு செய்யப்படுவாரா, இல்லையா என்ற விவாதம் நடந்து வருகிறது. ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. கடந்த இரு ரஞ்சி சீசன்களில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த ரஞ்சி சீசனிலும்கூட 600 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 3 சீசன்களிலும் அதிக ஸ்டிரைக் ரேட்டிலும், சராசரியாக 100ஐயும் தாண்டியுள்ளார். சர்ஃப்ராஸ் கான் தேர்வு குழுவின் கதவை தட்டவில்லை. அவர், அந்த கதவை உடைக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தற்போது அணியில் தேர்வு செய்யப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

சர்ஃபராஸ் கான் சராசரி

மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், கடந்த 2019-20ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் 154.66 சராசரியுடன் 998 ரன்களையும், 2021-22 ரஞ்சி சீசனில் 122.75 சராசரியுடன், 982 ரன்களையும், நடப்பு சீசனில் 89 சராசரியுடன், இதுவரை 801 ரன்களையும் எடுத்துள்ளார். அதாவது, இவருடைய சராசரி கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்ஃபராஸ் கான், இதுவரை 37 முதல்தர போட்டிகளில் 53 இன்னிங்ஸ்களில் 3400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதில், மொத்தம் 13 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார்.

கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்

இதில், ஒரு முச்சதமும் அடங்கும். இதையடுத்துத்தான், அவர் டெஸ்ட் தொடரில் இடம்பிடிப்பார் என கடந்த ஆண்டிலேயே பேசப்பட்டது. ஆனால், அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதற்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கும் 4 டெஸ்ட் பார்டர்-கவாஸ்கர் டிராபியிலாவது அவர் இடம்பிடிப்பார் என நம்பப்பட்டது. ஆனால் அதிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. அவரைத் தேர்வு செய்யாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், இர்ஃபான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் தேர்வுக்குழுவைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். குறிப்பாக கவாஸ்கர், “உருவத்தை கேலி செய்யாதீர்கள். அவர் பேட் செய்துவிட்டு வெளியில் ஓய்வு எடுக்கப்போவதில்லை. ஒருவேளை, ஒல்லியான வீரர்கள்தான் வேண்டுமென்றால், ஃபேஷன் ஷோவுக்கு செல்லுங்கள்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விஷயத்தில் சர்ஃபராஸ் கானே, வேதனையுடன் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com