”ஒரு ஸ்பின்னர் நோ பால் வீசுவது பெரிய குற்றம் ஜடேஜா” - கோவப்பட்ட முன்னாள் ஜாம்பவான்!

”ஒரு ஸ்பின்னர் நோ பால் வீசுவது பெரிய குற்றம் ஜடேஜா” - கோவப்பட்ட முன்னாள் ஜாம்பவான்!
”ஒரு ஸ்பின்னர் நோ பால் வீசுவது பெரிய குற்றம் ஜடேஜா” - கோவப்பட்ட முன்னாள் ஜாம்பவான்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் விக்கெட் வீழ்ந்தும், அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால், போட்டியை பார்த்த அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் அது கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹால்கர் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி வெற்றிபெற்று முன்னிலையில் இருந்துவரும் நிலையில், அடுத்த 2 போட்டிகளில் மீண்டுவந்து தொடரை சமன் வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம்கண்டு விளையாடி வருகிறது.

109 ரன்னுக்கு சுருண்ட இந்தியா:

3ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 109 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அபாரமான பந்துவிச்சை வெளிப்படுத்திய மேத்யூ குனேமன், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நாதன் லயன் அவருடைய பங்கிற்கு முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியை நிலைகுலையச்செய்தார்.

10 வருடத்திற்கு பிறகு 2 ஸ்பின்னர்களை வைத்து ஓபன் செய்த இந்தியா:

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, இந்திய அணி தான் வெட்டிய குழியில் தானே சென்று விழுந்துவிட்டதாக ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, இந்தியாவின் இரண்டு நட்சத்திர ஸ்பின்னர்களையும் களத்தில் இறக்கினார் கேப்டன் ரோகித் சர்மா. கடந்த 10 வருடத்திற்கு பிறகு இரண்டு இந்திய ஸ்பின்னர்கள் சேர்ந்து பந்துவீச்சை ஓபன் செய்வது இதுவே முதல்முறையாகும்.

2ஆவது ஓவரிலேயே விக்கெட்டை சாய்த்த ஜடேஜா :

இரண்டு ஸ்பின்னர்களை கொண்டு பந்துவீசிய ரோகித் சர்மாவின் அணுகுமுறை சரி தான் என்பது போல, இரண்டாவது ஓவரிலேயே ஆஸ்திரேலிய ஓபனர் டிரவிஸ் ஹெட்டை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. அந்த நோ பாலை வீசுவதற்கு முன்னர் வரை, ரோகித் சர்மா களத்தில் படு சுறுசுறுப்பாகவே செயல்பட்டு வந்தார். லபுசனே களத்திற்குள் நுழையும் போது, அணி வீரர்களிடமும் பேசினார் ரோகித் சர்மா.

லபுசனேவை 0 ரன்னில் அவுட்டாக்கிய ஜடேஜா - நோ பாலாக மாற்றப்பட்டது

4ஆவது ஓவரில் முதல் பந்தை ஜடேஜா வீச, கட் ஷாட்டிற்கு சென்ற லபுசனே, ஆஃப சைடில் கட் செய்து ஆடும்போது, இன்சைடு எட்ஜாக மாறி ஸ்டம்பில் பட்டது. 14 ரன்னுக்கு 2 விக்கெட்டுகள் என கெத்தாக கத்திக் கொண்டு வந்த இந்திய அணியினருக்கு, அம்பயர் நோ பால் என அறிவித்து ஷாக் கொடுத்தார். ரீப்ளேவில் ரவீந்திர ஜடேஜா கால்களை க்ரீசிற்கு வெளியே வைத்து பந்துவீசியது உறுதி செய்யப்பட்டது. நோ போல் கொடுக்கப்பட்டு லபுசனே களத்தில் நீடித்தார்.

2 ரிவ்யூக்களை இழந்த இந்தியா- அதனால் ஒரு விக்கெட்டை ரிவ்யூ செய்யாமல் இழந்தது

நோ பாலிற்கு பின்னர் விக்கெட் எடுக்க முடியாத உணர்ச்சி பெருக்கில் இருந்த ரவீந்திர ஜடேஜா, தொடர்ந்து வீசிய அனைத்து பந்தையும் விக்கெட்டை தேடும் டெலிவரியாக மாற்றினார். இந்நிலையில், இரண்டுமுறை கவாஜாவிற்கு எதிராக அம்பயர்கள் அவுட் கொடுக்காத போது, கேப்டன் ரோகித் சர்மாவிடம் நிர்பந்தித்த ஜடேஜா, இரண்டு ரிவ்யூக்களையும் இழக்கச்செய்தார்.

விக்கெட்டை தேடும் முயற்சியில் 2 ரிவ்யூக்களை இழந்த இந்திய அணி, 11ஆவது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் லபுசனேவிற்கு எதிராக எல்பிடபள்யூ குரல் வலுவாக எழுப்பப்பட்டது. அப்போதும் அம்பயர் அவுட் கொடுக்காததால், அம்பயரின் முடிவை மீறவும், மற்றொரு ரிவ்யூ மீது ரிஸ்க் எடுக்கவும் தயாராக இல்லாத இந்திய அணியினர், ரிவ்யூவிற்கு செல்லாமல் தவிர்த்தனர். ஆனால் ரீப்ளேவில் ஸ்டம்பானது ஆஃப் ஸ்டம்பை தாக்கியது தெரியவந்தது. இந்நிலையில், போட்டியின் அழுத்தம் காரணமாக இரண்டாவது முறையாக லபுசனே தப்பித்தித்தார். அவர் அப்போது 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஒரு ஸ்பின்னர் நோ பால் வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - சுனில் கவாஸ்கர்

ஜடேஜா நோ பால் வீசிய போது கமண்டிரியில் இருந்த இந்திய முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சுனில் கவாஸ்கர், ஒருமுறை நிதானத்தை இழந்து கோபத்திற்கு சென்றார். அப்போது பேசிய அவர், “இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த 2 போட்டிகளிலும் அவர் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார், ஆனால், ஒரு சுழற்பந்துவீச்சாளர் வீச்சாளர் நோ பால் வீசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது இந்தியாவிற்கு பெரிய பாதகமாக அமையும்” என்று தன் ஆதங்கத்தை பதிவு செய்தார்.

மேலும், ”பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, ஜடேஜாவுடன் இருந்து இந்த நோ பால் பிரச்னைகளில் இருந்து அவரை மீட்டுக் கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த தொடரில் மட்டும் 8 முறை நோ பால் வீசியிருக்கும் ஜடேஜா:

ஜடேஜா நோ பால் வீசுவது என்பது, புதிய ஒன்றாக இருக்கவில்லை. அவர் இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் மட்டும் இதுவரை 8 நோ பால்களை வீசியுள்ளார். அப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தப்படாததால், இந்தளவு பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால், ஒரு ஸ்பின்னர் நோ பால் வீசுவது என்பது, அதுவும் டெஸ்ட் போட்டியில் வீசுவது என்பது மோசமான ஒன்றானது மட்டுமில்லாமல், சரிசெய்யப்படவேண்டிய ஒன்றானதாகும்.

இந்நிலையில், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இந்திய ரசிகர்கள், ஒரு ஸ்பின்னர் நோ பால் வீசுவது குற்றம் என கூறிவருகின்றனர். ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ஒரு ரசிகர், “ஒரு ஸ்பின்னர் எப்படி இவ்வளவு நோ பால்களை வீச முடியும்?, இது மிகப்பெரிய குற்றம் ஜடேஜா” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com