”10க்கு 9முறை அம்பயர்கள் அதை நாட்-அவுட் கொடுப்பாங்க”- கோலி சர்ச்சை அவுட் பற்றி மார்க் வாஹ்

”10க்கு 9முறை அம்பயர்கள் அதை நாட்-அவுட் கொடுப்பாங்க”- கோலி சர்ச்சை அவுட் பற்றி மார்க் வாஹ்
”10க்கு 9முறை அம்பயர்கள் அதை நாட்-அவுட் கொடுப்பாங்க”- கோலி சர்ச்சை அவுட் பற்றி மார்க் வாஹ்

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டாகி வெளியேறியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா, நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். 50 ரன்னிற்கு முதல் விக்கெட்டை இழந்தாலும் கவாஜாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நல்ல நிலைமையில் தான் இருந்தது. ஆனால் 23ஆவது ஓவரை வீச வந்த அஸ்வின் லபுசனேவை எல்பிடபள்யூ மூலம் அவுட்டாக்கி வெளியேற்றியதோடு, தொடர்ந்து களத்திற்கு வந்த ஸ்டீவ் ஸ்மித்தையும் டக் அவுட்டாக்கி, ஒரே ஓவரில் உலகின் நம்பர் 1, நம்பர் 2 வீரர்களை வெளியேற்றி ஆஸ்திரேலியாவை நிலைகுலையச்செய்தார். பின்னர் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஆஸ்திரேலியாவை சரிவிலிருந்து காப்பாற்ற போராடிய கவாஜா, ஹேண்ட்ஸ்கோம் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து, ஆஸ்திரேலியாவை 263 ரன்களுக்கு எடுத்துச்சென்றனர்.

சுழலில் கலக்கிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்!

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும், முதல் நாள் முடிவில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் 2ஆவது நாளையும் இந்தியாவை அப்படியே விளையாட நாதன் லயன் அனுமதிக்கவில்லை. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நாதன், கே எல் ராகுலை 17 ரன்களில் வெளியேற்றினார். பின்னர் அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் சர்மாவை போல்டாக்கி வெளியேற்றிய லயன், அதே ஓவரில் புஜாராவையும் டக் அவுட்டாக்கி வெளியேற்றி இந்தியாவிற்கு அடிக்குமேல் அடி கொடுத்தார்.

54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற, கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இந்தியாவை நல்ல டோட்டலுக்கு எடுத்து செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் நீ போகலையா என்பது போல், மீண்டும் பந்துவீச வந்த நாதன் லயன் ஸ்ரேயாஸ் ஐயரையும் வெளியேற்றினார். 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இறங்கினர். ஜடேஜா பவுண்டரிகளாக அடித்து ரன்களை உயர்த்த ஸ்பீட் பிரேக்கர் போல வந்த டோட் முர்பி ஜடேஜாவை லெக் பை விக்கெட் மூலம் வெளியேற்றினார்.

விராட் கோலி அவுட்டா? நாட் - அவுட்டா? சர்ச்சை!

5 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், முழு பொறுப்பும், அழுத்தமும் விராட் கோலியின் மேல் திரும்பியது. விராட் கோலியும் அனைத்தையும் தோளில் தாங்கியபடி சிறப்பான தடுப்பாட்டத்துன், அவ்வப்போது பவுண்டரிகளையும் தட்ட ஆரம்பித்தார். இந்நிலையில் தான் 50ஆவது ஓவரை வீசவந்த மேத்யூ குலேமன், விராட் கோலியை லெக் பை மூலம் அவுட் கேட்க விக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் அம்பயரின் முடிவை விராட் கோலி எதிர்க்க முடிவு 3ஆவது அம்பயரிடம் சென்றது.

ரீப்ளேவில் விக்கெட்டை பரிசோதித்த போது பந்தானது ஒரே நேரத்தில் பேட்டிலும், விராட் கோலியின் கால்களிலும் படுவது தெரிந்தது. மேலும் பந்து பேட்டில் இருந்து செல்லும் போது திசை மாறி வெளியே சென்றது, அதிலிருந்து பந்தானது பேட்டில் பட்டுத்தான் திரும்புகிறது என்பதும் தெரிந்தது. ஆனாலும் விக்கெட்டானது ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக கொடுக்கப்பட்டு விராட் கோலி பெவிலியன் திரும்பினார்.

10க்கு 9 அம்பயர்கள் அதை நாட் அவுட் என சொல்வார்கள் - வார்க் வா

இதனையடுத்து விராட் கோலி அவுட்டா? நாட்-அவுட்டா? என்ற கேள்வி விவாத பொருளாகவே மாறி உள்ளது. பல ரசிகர்கள் 3ஆவது அம்பயரின் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலியின் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வா, ” 10க்கு 9 அம்பயர்கள் அதை நாட்-அவுட் என கூறுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விதிமுறையை சுட்டிக்காட்டி பதிவிட்டு வரும் ரசிகர்கள்!

டிவிட்டரில் பதிவிட்டு வரும் ரசிகர்கள், “ எம்சிசி விதிமுறையின் படி பந்தானது ஒரே நேரத்தில் பேட்டிலும் காலிலும் பட்டு சென்றால், பந்து முதலில் பேட்டில் பட்டதாகவே கருத்தில் கொள்ளப்படவேண்டும்” என்ற விதிமுறையை சுட்டிக்காட்டி, “ பிளைண்ட் 3ஆவது அம்பயர்” என பதிவிட்டு வருகிறார்கள்.

100 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை காப்பாற்றிய அஸ்வின் - அக்சர் ஜோடி!

அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்த நிலையில் 8ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் திணற, 81ஆவது ஓவர் வீச கேப்டன் பேட் கம்மின்ஸ் அஸ்வின் விக்கெட்டை கைப்பற்றி அந்த ஜோடியை பிரித்து வைத்தார்.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த அக்சர் பட்டேல் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டோட் முர்பி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் சேர்த்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com