ஒன்றாக நீந்துவோம் அல்லது மூழ்குவோம்: டீமுக்கு தோனி சொன்ன அட்வைஸ்!
’தல’ தோனியை, தாறுமாறாக கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். அவரது சமீபத்திய ஃபார்ம் அந்தக் கொண்டாட்டத்தை இன்னும் அதிகரிக்க வைத்திருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடுவது ஒரு புறம் இருந்தாலும் சொந்த அணியின் வீரர்களே அவர் திக்குமுக்காடும் அளவுக்கு அவரை கொண்டாடி வருகிறார்கள். அதற்கு காரணம் அவரது அசத்தலான வழிநடத்தல்.
பெங்களுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஷாக் கொடுத்தார் ஜடேஜா. அவரது ஃபார்ம் பற்றி முன்னாள் வீரர்களில் இருந்து சமீபத்திய வர்ணனையாளர்கள் வரை கிழித்துத் தொங்கவிட்டார்கள் பேசிப் பேசி. ’தோனி ஏன் அவரைப் பிடித்துத் தொங்கு கிறார்?’ என ஏகப்பட்ட கேள்விகள். அதற்கெல்லாம் நேற்று அமைதியாக பதிலளித்தார் ஜடேஜா. அதுதான் அந்த மூன்று முக்கிய விக்கெட்!
‘தோனிக்கு எப்போது யாரை இறக்க வேண்டும் என்பது தெரியும். ஃபார்ம் என்பது பிரச்னையே இல்லை. அதை எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுக்கலாம். அதற்கான அவகாசத்தையும் நம்பிக்கையையும் கேப்டன் கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதை அருமையாகச் செய்கிறார் தோனி’ என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் ஒருவர். இதனாலேயே சிஎஸ்கே அணியில் இருக்கும் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல வீரர்களும் புகழ்ந்து தள்ளுகிறார்கள் அவரை.
நேற்றைய போட்டிக்குப் பின் பேசிய தோனியிடம், ’நீங்க டீமை அடிக்கடி மாற்றவே மாட்டீங்களே, நேற்று ஏன் மாற்றுனீங்க?’என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ’எனக்கு எங்க பந்துவீச்சாளர்கள் மேல கவலை இருந்தது. இறுதிகட்ட ஓவர்கள்ல அதிக ரன்களை விட்டுக்கொடுக்கிறாங்க. நாக் அவுட் போட்டிக்கு முன்னால, இறுதிகட்டத்துல யாரை பந்துவீச வைக்கலாம் அப்படிங்கற கண்டுபிடிக்கணும். அதனாலதான் சில மாற் றங்களை செய்தேன்’ என்றார். அந்த மாற்றம் நேற்றைய போட்டியில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறும்போது, ’கடந்த சில வருடங்களாக தோனியை கவனித்து வருகிறேன். இந்த வருட ஐபிஎல்-லில் அவரது ஃபார்ம்தான் மிகவும் சிறப்பானது. மைதானத்துக்குள்ளும் வெளியேயும் அவர் சிறந்த மனிதர்’ என்கிறார்.
நேற்றையை போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜாவிடம் கேட்டபோது, ‘வழக்கம் போலதான் பந்துவீசினேன். பிட்ச் வறண்டிருந்தது. விராத் கோலி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது சரியான ஏரியாவில் பந்துவீசினேன். பந்து ஸ்டம்பை தாக்கியது. முதல் பந்திலேயே விக்கெட் விழும் என்பதை எதிர்பார்க்கவில்லை. கோலியின் விக்கெட் எப்போதுமே ஸ்பெஷல்தான். எங்கள் டீமுக்கு கேப்டன் தோனி, ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார். வெற்றியோ, தோல்வியோ எந்த தனிப்பட்ட ஒருவரையும் குறை சொல்லக் கூடாது என்பதுதான் அது. இதுதான் எங்கள் டீமின் தாரக மந்திரம். தோனி அடிக்கடி சொல்வார், ’நாம் ஒன்றாக நீந்தணும், இல்லைனா ஒன்றாக மூழ்கணும்’ என்று. கேப்டன் இப்படியொரு நம்பிக்கையை தருவது பெருமையாக இருக்கிறது’ என்றார்.
டீமுக்கு தோனி சொல்லும் அட்வைஸ்களை தொகுத்து, ’தோனியின் பொன்மொழிகள்’ என்று புத்தகம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!