“தலையை அடமானம் வைத்து விளையாடினேன்” - விராட் கோலி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி வெற்றி தொடர்பாக விராட் கோலி தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 116 (120) ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். வெற்றி தொடர்பாக பேசிய கோலி, “நான் போட்டியில் களமிறங்கியபோது, ஆட்டம் இக்கட்டான நிலையில் இருந்தது. நான் எனது தலையை அடமானம் வைத்து விளையாடினேன். எனக்கு வேறு வழியில்லை. நானும், விஜய் சங்கரும் சிறந்த ஜோடியாக ஆடினோம். விஜய் பேட்டிங் சிறப்பாக இருந்தது. எதிர்பாராத விதமாக அவர் ரன் அவுட் ஆகிவிட்டார். 250 ரன்களை கடந்துவிட்டால் இலக்கு கடினமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும்.
ரோகித் ஷர்மா மற்றும் தோனி இருவரது ஆலோசனையையும் நான் கேட்டேன். பும்ரா மற்றும் ஷமி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்திருந்தால் போட்டி இன்னும் சரியாக சென்றிருக்கும். விஜய் சங்கர் பந்துகளை சரியாக வீசினார். அவர் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறந்தவர் என்பதை காட்டிவிட்டார்.
இந்தப் போட்டி அவருக்கு ஒரு சிறந்த போட்டி. துணைக் கேப்டன் ரோகித் மற்றும் தோனி ஆட்டத்தை துல்லியமாக கவனித்தனர். அவர்களின் அனுபவம் எனக்கு பக்கபலமாக இருந்தது. பும்ரா உண்மையில் ஒரு சாம்பியன். அவர் நமது அணியில் இருப்பது நமக்கு பெருமை. அவர் பந்துவீசும் போது நமது நம்பிக்கை அதிகரிக்கும்” என்றார்.