”டியர் ரெட் பால் நான் மீண்டும் வருகிறேன்”-12 வருட ஏமாற்றத்திற்கு பிறகு திரும்பும் உனாத்கட்

”டியர் ரெட் பால் நான் மீண்டும் வருகிறேன்”-12 வருட ஏமாற்றத்திற்கு பிறகு திரும்பும் உனாத்கட்
”டியர் ரெட் பால் நான் மீண்டும் வருகிறேன்”-12 வருட ஏமாற்றத்திற்கு பிறகு திரும்பும் உனாத்கட்

2010 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் இந்திய அணியின் டெஸ்ட் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார் இந்திய வீரர் ஜெயதேவ் உனாத்கட்.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றுவிட்ட நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக வெளியேறிய நிலையில், இந்தியாவின் உனாத்கட்டை மீண்டும் அணிக்குள் அழைத்திருக்கிறது பிசிசிஐ.

விஜய் ஹசாரே டிரோபியில் மைதானத்திலேயே கண்ணீர் சிந்திய உனாத்கட்!

ரஞ்சிக்கோப்பை மற்றும் விஜய் ஹசாரே டிரோபி என சவுராஸ்டிரா அணியில் கேப்டனாக செயல்பட்ட உனாத்கட், அவரது அணிக்கு அனைத்து விதமான பங்களிப்பையும் அளித்து கோப்பைகளை வென்றுகொடுத்து அசத்தியுள்ளார்.

சமீப காலமாக சவுராஸ்டிரா அணியில் உனாத்கட்டின் பங்களிப்பு என்பது வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதது. ரஞ்சிக்கோப்பை தொடரில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி லீடிங் விக்கெட் டேக்கராக இருந்த போதிலும், இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கூட உனாத்கட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அவரது சொந்த அணிக்காக மட்டும் அனைத்து திறமைகளையும் வெளிக்கொணர்ந்த உனாத்கட் ரஞ்சிக்கோப்பை மட்டுமில்லாமல், சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையும் கைப்பற்றி கொடுத்தார். மேலும் கண்கலங்கிய உனாத்கட் மைதானத்திலேயே சிறிது நேரம் அமர்ந்தபடியே இருந்தார்.

முகமது ஷமி விலகிய நிலையில் டிவிட்டரில் டிரெண்டான உனாத்கட்டின் பழைய பதிவு!

காயம் காரணமாக முகமது ஷமி டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், உனாத்கட்டின் பழைய பதிவு டிவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. 2020ஆம் ஆண்டு அவர் பதிவிட்டிருந்த அந்த பதிவில், “ டியர் ரெட் எனக்கு ஒரு வாய்ப்பு கொடு, நான் உன்னை நிச்சயமாக பெருமைபடுத்துவேன்.. சத்தியம்” என்று எழுதியிருந்தார். அன்று அவர் பதிவிட்ட பதிவு மீண்டும் டிவிட்டரில் டிரெண்ட் செய்த ரசிகர்கள் அதை நிஜமாக்கியுள்ளனர்.

2021ல் ஏமாற்றம் மற்றும் விரக்தியில் உனாத்கட் வெளியிட்ட கடிதம்!

என்னதான் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தாலும், சர்வதேச போட்டிகள் மட்டுமில்லாமல், முதல்தர போட்டிகளிலும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது உனாத்கட்டிற்கு. அப்போது ரஞ்சிக்கோப்பையில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக இருந்தார் உனாத்கட்.

pic.twitter.com/4Yo4r0VKeK

— Jaydev Unadkat (@JUnadkat) June 12, 2021

இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து விரக்தியிலும் மன உளைச்சலிலும் டிவிட்டரில் லெட்டர் ஒன்றை வெளியிட்டார், உனாத்கட். அதில், ”நான் சிறுவனாக இருந்தபோது, விளையாட்டின் அனைத்து ஜாம்பவான்களும் மைதானத்தில் முழு மனதுடன் விளையாடுவதைப் பார்த்து உத்வேகம் பெற்றேன். இத்தனை வருடங்கள் கழித்து, அதை நானே அனுபவித்தேன்” என்று கூறியிருந்தார். மேலும் நான் இளமையாக இருந்தபோது, சிலர் என்னை ஒரு மோசமான, ஒழுங்கற்ற பந்துவீச்சாளர், ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து கனவு காண்கிறாய், அதுவெல்லாம் உனக்கு பளிக்காது என்று முத்திரை குத்தினார்கள். காலப்போக்கில் அவர்களையே நான் நன்றாக விளையாடுகிறேன் என்று பேச வைத்ததே என் அனுபவம் பெற்றுத்தந்தது. நான் என்னை வளர்த்துகொண்டே இருக்கிறேன், இதுவரை எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கும், என்னை ஆதரித்தவர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எனது அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கவிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

12 வருடங்கள் பிறகு இந்திய அணிக்கு திரும்பும் உனாத்கட்!

இந்நிலையில், மீண்டும் இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் உனாத்கட். ரசிகர்கள் மற்றும் பல நியூஸ் பக்கங்கள் அதனை கூறியிருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது பிசிசிஐ.

அதற்கு பின்னர் டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் உனாத்கட், “ அது உண்மைதான் போல இருக்கிறது. எனக்காக தொடர்ந்து ஆதரவளிக்கும் உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com