காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக பிரம்ம தீர்த்தத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீ கல்யாணசுந்தரர் - ஸ்ரீ கார்த்தியாயினி சமேதராக உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழாவின் தெப்போற்சவத்தை முன்னிட்டு சிறப்பு வானவேடிக்கைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமிகள் மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தெப்போற்சவ விழாவை முன்னிட்டு திருநள்ளாறு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.