மங்களகரமான சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 1ஆம் தேதி ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூர்ய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2-59 மணிக்கு சிம்ம லக்னம் கடக நவாம்சையில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
- ஜோதிட ரத்னாகரம் பாலசந்தர் மண்ணச்சநல்லூர்
தமிழ் புத்தாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அதாவது சூரிய பகவான் தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதமானது தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்தராயணம் என்றும் கூறுவர். தமிழ் புத்தாண்டானது, உத்தராயண காலத்தில் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் நுழைகிறார். இதனையே தமிழ் வருடத்தின் பிறப்பாக கொண்டாடுகிறோம்.
இப்புத்தாண்டை கேரளாவில் விஷூ கணி என்பார்கள். இம்மாதம் அறுவடை மாதம் என்பதால், இம்மாதத்தின் முதல் நாள் கனிகளுக்கும் காய்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவற்றை கடவுளுக்கு அற்பணிக்கும் விதமாக மா, பலா, வாழை போன்ற முக்கனிகளுடன் காய்கறிகள் தானியங்கள் அதனுடன் வெற்றிலைப்பாக்கு பூ உப்பு சக்கரை, பொன், பொருள், பணம், கண்ணாடி போன்றவற்றை முதல் நாள் இரவே பூஜை அறையில் வைக்கப்பட்டு, கடவுளை வாசனை மற்றும் கொன்றை மலர்களால் அலங்கரிப்பர்.
சித்திரை மாத பிறப்பு அன்று, காலையில் எழுந்ததும் அதில் கண்விழிப்பார்கள். இவ்வாறு செய்வதால் கடவுளின் ஆசியுடன் அந்த ஆண்டு முழுதும் பொன், பொருள், உணவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த இளவேனிற்காலத்தில் சரக்கொன்றை மரத்தில் மஞ்சள் நிற பூக்கள் பூத்து குலுங்கும். இதனை காலையில் எழுந்தும் காண்பது மங்களம் என கருதுகின்றனர்.
வாழ்க்கை என்பது கசப்பும் இனிப்பும் கலந்ததே என்பதை உணர்த்த வேப்பம்பூ, வெல்லம், மாங்காய் முதலியவற்றை கொண்டு சித்திரை பச்சடி தயாரித்து பரிமாறப்படுகிறது. மேலும் கோவில்களில் மூலிகையால் தயாரிக்கும் மருந்து நீர் வழங்கப்படும். அதனை குழந்தைகள் தலையில் பெரியவர்கள் வைத்து ஆசீர்வாதம் செய்வர். இதனால் நோய் நொடிகள் எதுவும் அண்டாது என்பது ஐதீகம். மேலும் மூத்தோர்கள் குழந்தைகளுக்கு கைவிசேடம் எனப்படும் சிறிய அளவிலான பணத்தை வழங்கி பெரியவர்கள் ஆசி வழங்குவர். பின் இனிப்பு பதார்த்தங்களை உற்றார் உறவினர்களிடம் பகிர்ந்து உண்டு புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.
சித்திரை மாதத்தை வரவேற்று கொண்டாட எல்லோரும் தயாரா..?