திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவரா நீங்கள்?.. அப்படி என்றால் இதை அவசியம் கடைப்பிடியுங்கள்!!

கிரிவலம் வரும் பாதையில் இருக்கும் அஷ்ட லிங்கத்தையும் தவறாமல் தரிசிக்க வேண்டும். இதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு லிங்கம் அதிபதியாக இருப்பார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலைPT

திருவண்ணாமலை கிரிவலம் போகிறவரா நீங்கள்.. அப்படி என்றால் இதை தெரிந்துக்கொள்ளுங்கள்...

1. திருவண்ணாமலையை குறிப்பிட்ட நாளில் தான் வலம் வரவேண்டும் என்ற ஐதீகம் ஏதும் இல்லை. எந்த நாளும் கிரிவலம் வரலாம். ஆனால், மலையை சுற்றி வரும் சமயம் இறை சிந்தனை அவசியம் இருக்க வேண்டும். அதேபோல் உடல் சுத்தம் அவசியம். வெய்யில் மழை எதுவாயினும் மலையை சுற்றி வருதல் நல்ல பலனை அளிக்கும். எங்கிருந்து மலையை சுற்ற ஆரம்பிக்கின்றோமோ அங்கு வந்து கிரிவலத்தை நிறைவு செய்யவேண்டும்.

2. கிரிவலம் வரும் பாதையில் இருக்கும் அஷ்ட லிங்கத்தையும் தவறாமல் தரிசிக்க வேண்டும். இதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு லிங்கம் அதிபதியாக இருப்பார். அந்தந்த ராசிக்குரியவர், குறிப்பிட்ட லிங்கத்தை வணங்கி வர... சிறந்த பலனளிக்கும். கிரிவலப்பாதையில் எம லிங்கத்தை கடந்து சென்றால் நந்திகேஸ்வரர் சன்னதி இருக்கும். மலையைச்சுற்றுவோர் தவறாமல் தரிசிக்க வேண்டிய சன்னதி இது. இதை அதிகார நந்தி என்பர்.

3. கிரிவலம் ஆரம்பிக்கும் சமயமும் முடிவு செய்யும் சமயமும் தீபம் ஏற்றி வழிபடலாம்.

4. கிரிவலப்பாதையில் பல சித்தர்களின் ஆஸ்ரமக்கள் உண்டு. அவர்களையும் தரிசித்து சித்தர்களின் அருளையும் பெறலாம்.

இந்திரலிங்கம்

திருவண்ணாமலை கிரிவலம் வரும் சமயம் முதலில் வருவது இந்திரலிங்கம். இது கிழக்கு திசையில் அமைந்துள்ளது. கிழக்கு திசைக்கு அதிபதி சூரியன் மற்றும் சுக்கிரன். புகழ், பணம், பதவிக்காக இந்த லிங்கத்தை வழிபட்டலாம்.

அக்னி லிங்கம்

தென்கிழக்கு பார்த்து அருள்பாலித்துக்கொண்டிருப்பார். இதற்கு சந்திரன் அதிபதி. பயம், பிணி, எதிரிகளின் தொல்லை நீங்கவும் இந்த லிங்கத்தை வழிபடவேண்டும்.

எமலிங்கம்

இதன் அதிபதி செவ்வாய். தெற்கு நோக்கி அருள்பாளித்துக் கொண்டிருக்கும் இவரை வணங்கினால், சங்கடங்கள் நீங்கும். இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.

நிருதி லிங்கம்

மேற்கு திசை நோக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ராகு அதிபதி இவ்விடத்திலிருந்து மலையைப்பார்த்தால் மலையானது நந்திவடிவத்தில் காட்சி அளிக்கும். இவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வருணலிங்கம்

மேற்கு திசை பார்த்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் இவரை வணங்கினால் புகழ் கிடைக்கும். இதற்கு சனிபகவான் அதிபதி. இதன் அருகில் இருக்கும் தீர்த்தம் வருண் தீர்த்தம்.

வாயு லிங்கம்

இவருக்கு அதிபதி கேது. இவரை வழிபட்டால் கண் திருஷ்டி, நீங்கும்.

குபேர லிங்கம்

இவருக்கு அதிபதி குரு. இவரை வணங்கினால் செல்வம் உயரும். மனதில் பக்தி அதிகரிக்கும். இங்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வர்.

இவரை கடந்து சென்றால், இடுக்கு பிள்ளையார் சன்னதி வரும். பிள்ளையாரை தரிசித்து விட்டு சிறிய இடுக்கின் மூல வெளிவரவேண்டும். இவரை வணங்குவதால், பெண்களின் கருப்பை கோளாறு, நரம்பு சம்பந்தபட்ட நோய்கள் விலகுவதாக ஐதீகம்.

ஈசான்ய லிங்கம்

இது கிரிவலப்பாதை முடிவுறும் எல்லைக்கு சற்றே தொலைவில் இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இவரை வழிபட்டால், படிப்பு கலை ஆகியவை நன்கு உயரும். இறைநிலை பெறுவதற்கு வழிவகுக்கும்.

கிரிவலப்பாதையில்..

கிரிவலம் வருவது மட்டும் அல்லாமல் முடிந்தால் மேற்சொன்ன லிங்கங்களை வழிபட.. நமது துன்பம் விலகி பொருளாதார நிலை உயர்வதென்பது நிச்சயம் என சிவதொண்டர்களும், அடியார்களும் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com