பஞ்சபூத ஸ்தலங்கள் போகணுமா? கவலைய விடுங்க.. ஒரே நாளிலேயே சென்னையில் தரிசிக்கலாம்.. எப்படி?
சிவபெருமான் கோயில்களில் மிக முக்கியமானது பஞ்சபூத தலங்கள்.. அவை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல், காளகஸ்தி ஆகிய ஐந்து தலங்களும் பஞ்சபூத தலங்களாகும்.. இந்த ஆலங்களுக்குச் சென்று வழிபட்டால் பஞ்ச பூதங்களினால் உடலில் ஏற்படும் நோய்கள், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் சிவ பெருமானுக்குரிய முக்கியமான விஷேச நாட்களில் இந்த கோயில்களுக்குச் சென்று வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
பொதுவாக 5 என்ற எண் சிவனுக்குரியது, சிவபெருமானுக்குரிய மந்திரமும் 5 எழுத்தைக் கொண்டது.. அதுமட்டுமல்லாமல், இந்த 5 மனிதர்களின் வாழ்க்கையுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிவன் பஞ்சபூதங்களின் வடிவில் காட்சி தருபவர். இதேபோல் மனிதனின் உடலில் ஐம்புலன்கள், ஐம்பொறிகள் ஆகியன பஞ்சபூதங்களால் ஆளப்படுகின்றன.
இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த பஞ்சபூத தலங்களில் சிவ பெருமான், அக்னியாக திருவண்ணாமலையிலும். நிலமாக காஞ்சிபுரத்திலும். நீராக திருவானைக்காவலிலும். ஆகாயமாக சிதம்பரத்திலும், காற்றாக காளஹஸ்தியிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவ பெருமானே பஞ்ச பூதமாக உள்ளார் என்பதும், பஞ்ச பூதங்களும் சிவனுக்குள் அடக்கம் என்பதை நமக்கு உணர்த்துவதாக இந்த ஆலயங்கள் அமைந்துள்ளன..
இந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் உண்டாகும்.. ஆனால் இந்த 5 ஊர்களுக்கும் எப்படி ஒரே நாளில் செல்வது? சாத்தியம் இல்லை என்றுதானே நினைக்கிறீர்கள்.. ஆனால், இந்த பஞ்சபூத ஸ்தலங்களுக்கும் ஒரே நாளில் செல்லலாம். ஆம் சென்னையிலேயே பஞ்சபூத தலங்கள் இருக்கின்றன.
சென்னையில் தங்கசாலை மிண்ட் அருகே நிலமாக ஏகாம்பரேஸ்வரர் கோயிலும், நீராக புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோயிலும், நெருப்பாக அருணாசலேஸ்வரர் கோயில் செளகார்பேட்டையிலும். காற்றாக காளஹஸ்தீஸ்வரர் கோயில் பாரிமுனையிலும், ஆகாயமாக சிதம்பரேஸ்வரர் கோயில் சூளையிலும் அமைந்துள்ளது.
இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நவகிரக தலமாகவும் விளங்குகின்றன. சென்னையில் உள்ள இந்த பஞ்சபூத தலங்கள் அனைத்தும் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திலேயே சென்றடையக் கூடிய தொலைவில் இருப்பதால் ஒரே நாளில் இத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வர முடியும். அதனால் சென்னையில் உள்ள சிவ பக்தர்கள் பஞ்சபூத ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடலாம். இதுதவிர மதுரை, நெல்லை, தென்காசி என பல இடங்களில் சிவனுக்கு பஞ்சபூத ஸ்தலங்கள் அமைந்துள்ளன. ஆனால் பஞ்ச பூத ஸ்தலங்களுக்குப் போக முடியாதவர்கள்.. வீட்டில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டாலே போதும்.. சிவனின் அருள் முழுமையாக கிடைக்கும்..

