மார்கழி 7ம் நாள் | திருப்பாவை, திருவம்பாவையில் இடம் பெற்ற பாடலும் அதற்கான விளக்கமும்!
திருப்பாவையில் இதுவரை 6 பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்த்தோம் 7ம் நாளான இன்று, ஆண்டாள் தோழிகளிடத்தில், பொழுது விடிந்து குருவிகள் அதன் இணையோடு பேசும் குரல், வீடுகளில் இருக்கும் பெண்கள் தயிரிலிருந்து வெண்ணை பிரிப்பதற்காக கடையும் ஒலி இது கேட்கவில்லையா? என்று இப்பாடலின் வழியாக பாசுரம் இயற்றி இருக்கிறார். அதாவது பொழுது விடிந்து நேரம் ஆகியும் இன்னும் உறக்கம் எதற்கு என்று தோழியை எழுப்புகிறார்.
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
பாடலின் விளக்கம் :
ஏய் பெண்ணே.. ஆனைச்சாத்தன் என்ற வலியன்குருவிகள் தனது துனையுடன் பேசிக்கொள்ளும் கீச்சிடும் குரலும் உனக்கு கேட்கவில்லையா என்ன? இங்கு வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதாவது, ஆயர்குலப்பெண்கள் வீட்டில் இருக்கும் பசுக்களின் பால் வாடை அப்பெண்களின் தலையிலும் இருக்கும் என்கிறார். அதனால்தான் வாசனைமிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப்பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? என்கிறார்.
எங்கள் எல்லோரையும் தலைமையேற்று நீ அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் வந்து நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் நீ எழாமல் தூங்குகிறாயே..! உன் வீட்டுக்கதவைத் திற. என்று கூறுகிறார்.
மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை பாடல் 7
இந்த பாடலில், திருவண்ணாமலையில் வலம் வரும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் தரிசனம் செய்ய தோழிகளை எழுப்புவதாய் அமைந்துள்ள பாடல்களில் இன்று
அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
பாடலின் விளக்கம்
அன்னே- தாயினும் மேலான பெண்ணே! தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.இதையெல்லாம் கேட்டும், நீ எழாமல் இருக்கிறாய் இன்று உன் உறக்கத்துக்கு காரணம் தான் என்ன? பெண்ணே! இளகியமனம் படைத்தவர்கள் ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருகியமனத்துடன் இருக்கிறாயே. அந்த தூக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா?