மார்கழி 23ம் நாளான இன்று திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களின் விளக்கம்
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இதில் திருப்பாவையின் 23 வது பாடலையும் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியின் 3 பாடல்களையும் இனி பார்க்கலாம்.
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
திருப்பாவை
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து... மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் சிங்கமானது திடீரென விழித்தால் பசியில் அதன் கண்கல் எப்படி தீப்போல் தகிக்குமோ...
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா... பசியில் குகையின் உள்ளு புறமும் நடமாடியபடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புமோ அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே!
உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.... சிங்கத்தைப்போல் நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து எங்களுக்கு அருள் செய். மாறாக சிம்மாசனத்தில் அமர்ந்துக்கொண்டு, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை தெரிந்திருந்தும், இருப்பிடத்தை விட்டு அகலாமல் இருக்கும் கண்ணனே... சீக்கிரம் எழுந்து வந்து எங்களின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து எங்களின் ஆசையை நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
திருப்பள்ளி எழுச்சி பாடல் - 3 மாணிக்கவாசகர் பாடியது...
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
மாணிக்கவாசகர் சிவபெருமானை, “சூரியன் உதித்துவிட்டது. குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நானும் மனதில் உன்னை தரிசிக்கவேண்டி உன் வாயில் வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக.” என்று மாணிக்கவாசகர் இறைவனை எழுப்ப துதிப்பாடுகிறார்.