மார்கழி மாதம் 14ம் நாள்: திருப்பாவை, திருவெம்பாவை சிறப்புப் பாடல்கள்
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.
இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம்.
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
இதில் பதிநான்காம் நாளான இன்று..
திருப்பாவை
“மலர்கள் மலர்ந்துவிட்டன. அல்லியும் சுருங்கி விட்டது. இது பொழுது புலர்ந்ததற்கான அடையாளம். ஆகவே தோழி நீ சீக்கிரம் எழுந்திரு” என்று ஆண்டாள் தோழியை எழுப்புகிறார்.
பாடல்:
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.
பொருள்
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்... உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்... செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன.
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்... காவி உடையணிந்த துறவிகள்
தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி.... திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!... ஆனால், பெண்ணே! எங்களை முன்னே எழுப்புவேன் என்று சொல்லி தூங்கும் பெண்ணே... சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும்,
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்... தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!
என்கிறார் ஆண்டாள்.
திருவெம்பாவை
அடுத்ததாக சிவபெருமானின் பெருமையக்கூறும் திருவெம்பாவை...
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையில் 14ம் நாளான இன்று நீராடும் சமயம் பக்தர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாய் தன் பதிகத்தின் மூலம் விளக்குகிறார்.
பாடல்:
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
ஆண்கள் அந்த காலத்தில் காதணிகள் அணிந்து இருப்பார்கள். நீராடும் சமயம் அவர்கள் அணிந்துள்ள காதணிகள், அவர்கள் அணிந்துள்ள தங்கநகைகள் தண்ணீரில் ஆடுமாம். அதாவது நீரினுள் மூழ்கி எழும்பொழுது நகைகள் அசைவதை குறிப்பிடுகிறார். அதே போல் பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆடுமாம். இதற்கு ஏற்றார் போல குளிர்ந்த நீரில் நீராடுங்கள் என ஆண் பெண்ணுக்கு சொல்கிறார் மாணிக்கவாசகர்.
மேலும் “அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களை எல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் தாயுமானவராய் இருக்கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்” என்கிறார்.