மார்கழி 11ம் நாளான இன்று திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் அழகிய விளக்கம்
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம். இதில் பதினொன்றாம் நாளான இன்று..
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
ஆண்டாள் அருளிய திருப்பாவையில்...
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து... கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும்,
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்.... தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும்,
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே.... மாசு மருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்... புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்.... நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள்.
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட.... அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.....செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? ஆகவே சீக்கிரம் எழுந்துகதவைத்திற... விடிந்துவிட்டது பாவை நோன்பு இருக்க புறப்படு... என்று ஆண்டாள் தோழியை எழுப்புகிறார்.
திருவெம்பாவை
அடுத்ததாக சிவபெருமானின் பெருமையக்கூறும் திருவெம்பாவை
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையில் 11ம் நாளான இன்று பெண்கள் எழுந்து குளத்தில் நீராடி சிவைன் துதியை பாடுவதாய் அமைந்துள்ளது இந்த பதிகம்.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
விளக்கம்
உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் முகேர் என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் கையால் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!