நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா கோவில் ஆண்டு திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாலமாக துவங்கியது. உத்திரிய மாதா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது.
முன்னதாக பேராலயத்திலிருந்து புனித உத்திரிய மாதா தேரை, மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
இதையடுத்து வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. அப்போது இருபுறமும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித உத்திரிய மாதா, செபஸ்தியர், அந்தோணியார் ஆகிய தேர்கள் மீது மலர்களை தூவி தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர். அப்போது, வண்ணமிகு வானவேடிக்கைகள் நடைபெற்றது. வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா கோவில் ஆண்டு திருவிழா இன்று காலை கொங்கனி மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.