"எங்களால் முடியாவிட்டால் உங்களாலும் முடியாது" - நேட்டோவை சாடிய செலன்ஸ்கி

"எங்களால் முடியாவிட்டால் உங்களாலும் முடியாது" - நேட்டோவை சாடிய செலன்ஸ்கி
"எங்களால் முடியாவிட்டால் உங்களாலும் முடியாது" - நேட்டோவை சாடிய செலன்ஸ்கி

உக்ரைன் தாக்குப்பிடிக்கமுடியாவிட்டால் ஐரோப்பாவாலும் அது முடியாது என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை நேட்டோ நிராகரித்த நிலையில் செலன்ஸ்கியின் இந்த கடும் விமர்சனம் வெளியாகியுள்ளது. தனது கோரிக்கையை நிராகரித்தது மூலம் உக்ரைன் மீது மேலும் குண்டு மழை பொழிய நேட்டோ அனுமதித்துள்ளதாக செலன்ஸ்கி விமர்சித்துள்ளார். உக்ரைனிற்கு ஆதரவாகவும் போர் நிறுத்தம் செய்ய ரஷ்யாவை வலியுறுத்தியும் பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் கூட்டங்கள் நடந்தன. ஃப்ராங்க்ஃபர்ட், பாரிஸ், பிராக் உள்ளிட்ட நகரங்களில் நடந்த இக்கூட்டங்களில் காணொலி முறையில் பங்கேற்று பேசிய செலன்ஸ்கி, தற்போதைய போரில் உக்ரைன் தாக்குப்பிடிக்காவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளும் நிலைத்திருக்க முடியாத நிலை ஏற்படும் என்றார்.


உக்ரைன் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் தங்கள் கோரிக்கையை நேட்டோ படைகள் ஏற்காததற்கும் செலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார். எனினும் செலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றால் போர் ஐரோப்பா முழுவதும் பரவும் நிலை ஏற்படும் என்பதால் அதை நிராகரித்ததாக நேட்டோ படைகளில் செயலாளர் ஸ்டால்டன்பர்க் விளக்கம் அளித்தார். இதற்கிடையில் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக தளங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் நம்பகமான செய்தியை அறிவதில் சிக்கல் ஏற்படும் என ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. பிபிசி உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களும் மாஸ்கோவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவைத்துள்ளன. முன்னதாக ரஷ்ய ராணுவத்தை பற்றி வதந்தி பரப்புவோருக்கு 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டத்தில் அதிபர் புட்டின் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com