உலகின் தலைசிறந்த 'ஸ்நைபர்' உக்ரைன் படையில் இணைந்தார்: யார் இவர்? காரணம் என்ன?
உக்ரைன் மீது தொடர்ந்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்தன. குறிப்பாக பொருளாதார தடை விதிக்கும் முயற்சிகளையும் அமல் செய்தன. இருந்த போதும் போர் நின்றபாடில்லை. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலென்ஸ்கி, வெளிநாட்டினரும் ரஷ்யாவுக்கு எதிராக போரிட தங்கள் நாட்டு படையில் இணைந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்திருந்தார்.
“தீ அபாயம் என தெரிந்தவுடன் அதை அணைக்க புறப்படும் தீயணைப்பு படை வீரனைப் போல உக்ரைன் அதிபரின் அழைப்பு எனக்கு இருந்தது. அதனால் அவர்களுக்கு உதவலாம் என வந்துவிட்டேன். அவ்வளவு தான். இங்கு மக்கள் ஐரோப்பியர்களாக தாங்கள் இருக்க வேண்டுமென போராடி வருகிறார்கள். அவர்களுக்கு என்னாலான உதவி இது” என சொல்லியுள்ளார் உலகின் தலைசிறந்த துப்பாக்கி சூடு வீரர்களில் ஒருவரான ‘வாலி’.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாலி உக்ரைன் சென்றுள்ளார். இரண்டே நாளில் ஆறு ரஷ்ய நாட்டு ராணுவ வீரர்களை அவர் சுட்டுக் கொன்றுள்ளார் என தகவல்.
யார் இவர்?
கனடாவின் 22-வது ராணுவ படையை சேர்ந்தவர் வாலி. நாள் ஒன்றுக்கு சுமார் 40 பேர் வரை சுட்டுக் கொல்லும் திறன் படைத்தவர் என சொல்லப்படுகிறது. அதனால் அவர் உலகின் தலைசிறந்த ஸ்னைப்பர்களில் ஒருவர் என அறியப்படுகிறார்.
40 வயதான அவர் 2009 முதல் 2011 வரை ஆப்கானிஸ்தனில் எதிரிகளை தீர்த்துக்கட்டும் பணிகளை கவனித்தவர். அரபு மொழியில் வாலி என்பதற்கு பாதுகாவலன் என்பது பொருள். அதனால் அவர் ‘வாலி’ என அழைக்கப்படுகிறார். அந்த பெயருக்கு ஏற்ப உக்ரைன் நாட்டு பாதுகாவலனாக ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிந்து வருகிறார். அவருக்காக அவரது இல்லத்தில் மனைவியும், அவரது ஒரு வயது மகனும் காத்துள்ளனர்.