ரஷ்ய படைகள் தங்கள் நாட்டின் தலைநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின்மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 19ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்படுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டடம் மீது ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், இருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சர் Anton Gerashchenko தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே உக்ரைன் ராணுவம் டொனெட்ஸ்க் பகுதியில் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், உக்ரைன் ரஷ்யா அதிகாரிகள் பங்கேற்றுள்ள 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை காணொளி வாயிலாக தொடங்கியுள்ளது. பெலராஸ் நாட்டில் இருமுறை நடைபெற்ற பேச்சுவாரத்தையிலும், துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் போர் நிறுத்துவதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.