மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் காரணமாக கிரிமியாவிற்கு புதிய வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்ட எட்டாம் ஆண்டு விழாவை ரஷ்யா கொண்டாடியது. இதையொட்டி பேசிய ரஷ்ய அதிபர் புடின், மேற்கத்திய நாடுகளின் பல்வேறு தடைகள் காரணமாக கிரிமியாவின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
எனினும் உக்ரைன் மீது எடுக்கப்பட்ட சிறப்பு ராணுவ நடவடிக்கையால், கிரிமியா தீபகற்பத்தில் ரஷ்யர்கள் தொழில் தொடங்குவதற்கான புதிய வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதாக பேசினார். தடைகளால் கிரிமியா மக்களிடம் முன்பு ஏற்பட்டிருந்த அச்சம் தற்போது அகன்றுவிட்டதாகவும் புடின் கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் தனது படைகளை குவிக்க தொடங்கிய ரஷ்யா, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது தீவிர தாக்குதலை நடத்த தொடங்கியது. போரை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த பலவேறு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உட்பட பல உலக நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது. இதன் காரணமாக பொருளாதார ரீதியாக ரஷ்யாவுக்கு பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.