உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என ரஷ்யா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இத்தாக்குதலில் ரஷ்ய படைகளுக்கு தங்கள் படைகள் கடுமையான பதிலடி கொடுத்து வருவதாக தெரிவித்த உக்ரைன், இதில் எதிர்த்தரப்பில் சுமார் 4 ஆயிரத்து 500 வீரர்கள் இறந்ததாகவும் தெரிவித்திருந்தது. இது தவிர ஏராளமான ரஷ்ய ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பேசிய ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் இகோர் கொனஷெங்கோவ், தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் பலரும் காயமடைந்திருப்பதாக தெரிவித்தார். எனினும் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. உக்ரைன் தரப்பை விட தங்கள் தரப்பில் பாதிப்புகள் பல மடங்கு குறைவு என்றும் கொனஷெங்கோவ் தெரிவித்தார்.
தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட உக்ரைன் ராணுவ தளங்களை தங்கள் படைகள் தாக்கியுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.