ஆர்டர் பழக்கம் | ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஆன்லைன் துரித உணவுகள்; அடிமையாகும் இளம் தலைமுறையினர்!
ஆண்ட்ராய்டு மொபைலும், இணையமும் தனிமனிதன் மட்டுமல்லாமல் நம் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் அளப்பரிய முன்னேற்றத்திற்கு அளவில்லாமல் கைகொடுத்துள்ளது என்பதில் மாற்றுகருத்தில்லை. இந்த தொழில் நுட்ப வளர்ச்சி முன்னேற்றங்களுக்கு மட்டுமின்றி மிகப்பெரிய மாற்றங்களுக்கும் வழிவகுத்துள்ளது என்பதையும் நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் அவ்வாறு இணையம் ஏற்படுத்திய மாற்றங்களில் நம் உணவுப்பழக்கவழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே மிகுந்த தாக்கமுடையது என்பதை சமீபத்தில் வெளியான ஆய்வுகளின் முடிவுகள் உறுதிபடுத்துகின்றன.
அதிர்ச்சி தரும் ஆய்வுகள்
நாட்டில் இளைஞர்களின் உணவுபழக்கம் மாறி வருவது குறித்து 'லோக்கல் சர்க்கிள்ஸ்' என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் gen z தலைமுறையினர் வீட்டு உணவுகளிலிருந்து விலகி ஆன்லைனில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி உண்பதாகவும் அந்த உணவுப்பொருள்களில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகளவில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 277 மாவட்டங்களில் 24,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமேசான் ஃபிரெஷ் ,பிளிங்இட், ஜெப்டோ, ஸ்விக்கி, இன்ஸ்டா மார்ட் போன்ற இகாமர்ஸ் மற்றும் விரைவு வர்த்தக தளங்களில் விற்கப்படும் உணவுப்பொருள்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை பேக்கேஜ் செய்த மிகவும் பதப்படுத்தபட்ட மற்றும் குப்பை உணவுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆன்லைனில் உணவு வாங்கும் குடும்பங்களில் 39 சதவீதம் தங்கள் வீட்டில் இளைஞர்கள் உணவுப்பொருள்களை அதிகம் ஆர்டர் செய்வதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிளிங்இட் (62%) மற்றும் ஜெப்டோ(58%) போன்ற செயலிகளில் தான் அதிகம் ஆர்டர் செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இளம்வயதில் BP, Sugar
கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ஆன்லைன் உணவு விற்பனை சுமார் 80,300 கோடி ரூபாய் அளவிற்கு நடந்துள்ளதாகவும், இந்த மதிப்பு 2028 ஆம் ஆண்டு 2,70,810 கோடி ரூபாய் வரை உயரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அதில் பணியாற்றுபவர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் அரசிற்கு கிடைக்கும் வருவாய் எனப் பல பொருளாதார காரணிகள் உள்ளடங்கியிருந்தாலும் பல கோடி மக்களின் உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு அரசு மற்றும் உணவு பாதுகாப்புத் துறையும் ஆரோக்கியமற்ற, தரக்குறைவான உணவுப்பொருள்களை விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களில் உள்ள கொழுப்பு , சர்க்கரை மற்றும் உப்பு பற்றிய உண்மையான விவரங்களை தெளிவாகவும்,பெரிதாகவும் அச்சிடுவதை உறுதி செய்ய வேண்டும்.
துரித உணவுகளுக்கு பழக்கமாகி பலவித உடல் உபாதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினர் ஆன்லைன் உணவுகளை தவிர்த்து உடல்நலத்தைக் கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்திற்கு மாறுவதே எதிர்காலத்தில் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ வழிவகை செய்யும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- ஜெ.தமிழரசன்
