சாலையில் வழிவிடவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், அரசுப் பேருந்தை அடித்து நொறுக்கியதோடு பேருந்து டிரைவரையும் தாக்கிய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானாவை சேர்ந்த அரசுப் பேருந்து ஒன்று விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் ஹைதராபாத் நோக்கி சென்றிருக்கிறது. அந்த நேரத்தில் பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் பேருந்தை முந்தி செல்வதற்காக ஹார்ன் அடித்துள்ளனர். ஆனால் பேருந்து டிரைவர் அந்த இளைஞருக்கு வழிவிடவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் பேருந்துக்கு முன்னால் வேகமாக சென்று அதனை மறித்துள்ளனர். பின்னர் கீழே கிடந்த கற்களை எடுத்து பேருந்தின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அத்துடன் தங்களுக்கு வழிவிடாத பேருந்து டிரைவரையும் தாக்கியுள்ளனர். இதுமட்டுமின்றி கண்டக்டரின் கையில் இருந்த பையில் இருந்து பணத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.