சொதப்பிய 'கூகுள் மேப்' - வழி தவறிய சுற்றுலாப் பயணிகள் பாறையில் இருந்து தவறி விழுந்த பரிதாபம்!
இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூகுள் மேப் பார்த்து வழி தவறினர். இதனால் பாறையில் இருந்து தவறி விழுந்ததில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்தினுள் கிழார்குன்று நீர்வீழ்ச்சி உள்ளது. கேரளா எர்ணாகுளம் மாவட்டம் போர்டு கொச்சியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் எட்டு பேர் கொண்ட குழு தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்தினுள் உள்ள கிழார் குன்று நீர்வீழ்ச்சியை காண சென்றனர். மலை உச்சி பகுதி வரை வாகனம் செல்லும் என்பதால், அங்கிருந்து வனத்தினுள் கூகுள் மேப் உதவியுடன் நீர்வீழ்ச்சியை நோக்கிச் சென்றனர். அந்த நீர்வீழ்ச்சியைக் காண கூகுள் மேப் உதவியுடன் சென்ற சுற்றுலா பயணிகள் வழி தவறினர்.
கூகுள் மேப் காட்டிய தவறான தகவலால் எதிர் திசையில் 4 கி.மீ., துாரம் அடர்ந்த வனத்தினுள் சென்றவர்கள் யானைகள் நடமாடும் பகுதியில் சிக்கி திரும்ப இயலாமல் தவித்தனர். இந்நிலையில் அக்குழுவைச் சேர்ந்த ஜிஜூஜேம்ஸ் 35, எதிர்பாராத வகையில் பாறையில் இருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார். அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அதனால் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சுற்றுலா வந்தவர்கள் தகவல் அளித்தனர்.
அவர்கள் கரிமண்ணுார் போலீசாருக்கு அளித்த தகவலின்படி எஸ்.ஐ., பிஜூ ஜேக்கப் தலைமையில் போலீசார் வெகு நேரம் போராடி சம்பவ இடத்திற்குச் சென்று தொடுபுழா தீயணைப்பு துறை, வனத்துறை உதவியுடன் காயமடைந்த ஜிஜூ ஜேம்ஸ்சை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கூகுள் மேப் எல்லா இடங்களிலும் உதவாது எனவும் அதை ஒரு உதவிக்காக பயன்படுத்தலாமே தவிர முழுக்க நம்பக் கூடாது என போலீஸார் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கினர்.