''அபிநந்தனின் உடனடி விடுதலைக்கு பின்னால் உலக நாடுகளின் அழுத்தம்'' - அரசியல் நோக்கர்கள்
விமானி அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்ததற்கு பின்னால் அமெரிக்கா, சவுதி அரேபியா, யூஏஇ ஆகிய நாடுகளின் கடுமையான அழுத்தம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 14ம் தேதி முதல் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம் நிலவி வருகிறது. 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் நிலவியது. அதே நேரம் இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வசமுள்ள வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து இந்திய அரசும் பாகிஸ்தானிடம் வலியுறுத்தியது. நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை இந்தியர்கள் பலரும் கொண்டாடினர்.
இந்நிலையில் அபிநந்தன் விடுவிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த, இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள், தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. சர்வதேச நிர்பந்தம், ஜெனீவா உடன்படிக்கையின் படியே விமானி விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளன. மேலும் அபிநந்தன் விடுவிக்கப்படுவதற்கு பின்னால் அமெரிக்கா, சவுதி அரேபியா, யூஏஇ ஆகிய நாடுகளின் கடுமையான அழுத்தம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்தியா பாகிஸ்தான் பதட்டம் நிலவத்தொடங்கியதுமே இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்தார். அதில் புல்வாமா சம்பவத்திற்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. இரு நாடுகளுக்குள் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்வோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று வியட்நாமின் ஹனாயின் இருந்து பேசிய ட்ரம்ப், ''இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை விரும்புகிறோம். இரு நாடுகளின் அமைதியை நாங்கள் விரும்புகிறோம். விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்தார். அவர் பேசி முடித்த சில மணி நேரங்களில் அபிநந்தன் குறித்த விடுவிப்பு செய்தியை வெளியிட்டார் இம்ரான்கான்.
இந்தியா பாகிஸ்தான் பதட்டம் நிலவிய நேரத்திலேயே சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சலாம் இரு நாடுகளுக்கும் வருகை தந்தார். இரு நாடுகளுடன் வணிக ரீதியிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அதிக அளவிலான முதலீடுகளை சவுதி அரேபியாவும், யூஏஇயும் செய்துள்ளன.
இந்த நேரத்தில் இந்தியா -பாக் இடையே நிலவும் பதட்ட நிலையை மேலும் வளர விட சவுதியும், ஐக்கிய அரபு அமீரகமும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சவுதியின் முக்கிய அமைச்சர்களும், தலைவர்களும் இரு நாடுகளுக்கும் விரைந்தனர். இரு நாடுகளும் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினம் சவுதியின் தூதர் முகமது அல் சாடி பிரதமர் மோடியை சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.
அபிநந்தன் விடுவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் நோக்கர்கள், இம்ரான்கானின் வார்த்தைகளுக்கு பின்னால் உலக நாடுகளின் கடுமையான அழுத்தம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், உலக நாடுகளிடம் முதலீடுகளை ஈர்க்க பாகிஸ்தானுக்கு தேவை இருப்பதாகவும், அதனால் தான் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தான் அபிநந்தனை உடனடியாக விடுவிக்கும் முடிவு எடுத்திருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.