சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை !

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை !
சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை !

ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிந்து மற்றும் கனக துர்கா ஆகியோர் தொடர் மிரட்டல் காரணமாக தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக கொச்சிக்கு வெளியே ரகசிய இடத்தில் பிந்துவும், கனக துர்காவும் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மிரட்டல் காரணமாக சொந்த வீடுகளுக்கு தாங்கள் செல்ல முடியாதது குறித்து ஊடகங்களுக்கு தொலைப்பேசி வாயிலாக அளித்தப் பேட்டியில் பிந்துவும் கனகதுர்காவும் கூறியுள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து உடனடியாக அந்தத் தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதம் திறக்கப்பட்டது. ரெஹானா பாத்திமா முதல் ஸ்வீட்டி மேரி வரை ஐயப்பன் கோவில் சன்னிதானம் செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தங்களது முயற்சியை கைவிட்டனர். மேலும் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தடியடி சம்பவமும் நடைபெற்றது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பல முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்பு, மண்டலப் பூஜை நிறைவடைந்து நவம்பர் 27 ஆம் தேதி சபரிமலை கோயில் நடை அடைக்கப்பட்டது. அதனையடுத்து மகர விளக்குப் பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இப்பூஜைக்காக கோயிலின் நடை ஜனவரி 19 ஆம் தேதி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம் மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கினார்கள். இப்படியாக ஜனவரி 2 ஆம் தேதி காலை கேரள அரசு ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் பிந்து மற்றும் கனக துர்கா எனும் 40 வயதுடைய பெண்கள் அதிகாலை சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தது. இதனையடுத்து கேரள மாநிலம் முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது. கேரள மாநில ஆளுநர் மாநில அரசிடம் சட்டம ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை கேட்குமளவிற்கு விவகாரம் சென்றது.

சபரிமலை தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் பி.ஆர்.ராமசந்திர மேன்ன், என்.அனில் குமார் அமர்வு விசாரித்து வருகிறது. இவர்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு பல கேள்விகளை முன் வைத்தனர் அதில் "சபரிமலை கோவில் பக்தர்கள் நிம்மதியாக வந்துச் செல்ல வேண்டிய இடம். ஒருபோதும் அதன் புனிதம் பாதிக்கக் கூடாது. பிந்து - கனகதுர்கா ஆகியப் பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது குறித்து ஏதாவது மறைமுக திட்டம் இருக்கிறதா ? அவர்கள் இருவரையும் வேறு யாரேனும் இயக்குகிறார்களா என்பதை மாநில அரசு விசாரிக்க வேண்டும்" என கோரியிருந்தனர்.

இந்நிலையில் கேரள ஊடகங்களுக்கு பேட்டியளித்த பிந்துவும் கனக துர்காவும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தனர் அதில் " சபரிமலை சன்னிதானம் செல்வதற்கு முன்பு எங்களுக்கு பயமேதுமில்லை. எங்களின் ஓரே நோக்கம் எப்படியாவது சன்னிதானம் சென்று தரிசனம் செய்துவிட வேண்டுமென்பதுதான். எங்களை போக வேண்டாம் ஆபத்து என சொந்தங்கள் முதல் போலீஸார் வரை எச்சரித்தனர். நாங்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியதும் ஏராளமான போராட்டம் நடைபெற்றது என்பதை நாங்கள் அறிவோம். பாஜக தலைமை அதன் தொண்டர்களை எச்சரிக்க வேண்டும். எங்களுக்கு மிரட்டல்கள் வருவதால் போலீஸார் எங்களை பாதுக்காப்பான இடத்தில் தங்க வைத்துள்ளார்கள். அடுத்த வாரம் வீட்டுக்கு செல்வோம் என நம்புகிறோம்" என்றனர்.

Courtesy: The Times of India

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com