ம.பி. | கணவருடன் நடனமாடிய பெண்.. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கணவருடன் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கணவருடன் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவில் நவராத்திரி பண்டிகை கடந்த சில நாள்களாக களைகட்டி வருகிறது. அந்த வகையில் இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ம.பியின் கர்கோன் மாவட்டத்திலுள்ள பலாசி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சோனம், தன் கணவர் கிருஷ்ணபாலுடன் இணைந்து கார்பா நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது சரிந்து கீழே தரையில் விழுகிறார். பின்னர், அவரை உறவினர்கள் மருத்துவர்கள் தூக்கிச் சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாய்ப் பரவி வருகின்றன.
மருத்துவர்களின் கூற்றுப்படி, வயது வித்தியாசமின்றி யாருக்கும் மாரடைப்பு ஏற்படலாம். சில சமயங்களில், அறியப்படாத மற்றும் கண்டறியப்படாத இதய நோய்கள் உள்ளவர்களுக்கு எந்த வகையான உடல் செயல்பாடும் இதய பிரச்னைகளைத் தூண்டும். திடீர் இதய மரணம் என்பது அனைத்து இதய செயல்பாடுகளின் விரைவான மற்றும் எதிர்பார்க்கப்படும் முடிவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மரபணு இதய நோய் போன்ற கண்டறியப்படாத இதய நோய்கள், டீனேஜர்கள் மற்றும் இளைஞர்களுக்கு திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும். அடையாளம் காணப்படாத இதய நோய், போட்டி விளையாட்டு போன்ற உடல் செயல்பாடுகளின்போது ஓர் இளைஞனை திடீரென இறக்கச் செய்யலாம். ஆனால் உடல் செயல்பாடு இல்லாமல் திடீர் இதய மரணம் ஏற்படலாம் என்கின்றனர் அவர்கள்.
ஆரோக்கியமற்ற உணவு முறைகள், உட்கார்ந்தே வேலைசெய்யும் பழக்கம், அதிக மனஅழுத்தம், புகைபிடித்தல் மற்றும் அதிகரித்த போதைப்பொருள் பழக்கம், பரம்பரையாக ஏற்படும் அதிக கொழுப்பு அல்லது கண்டறியப்படாத பிறவி இதய நோய்கள் போன்ற வாழ்க்கை முறை பிரச்னைகளால் மாரடைப்பு ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவற்றுடன், இளம் வயதிலேயே நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்கள் அதிகரிப்பதற்கும் காரணம் என அவர்கள் தெர்விக்கின்றனர்.