பாவமன்னிப்பு முறையை ஒழிக்கச் சொல்வதா? பாதிரியார்கள் பிரதமருக்கு மனு!

பாவமன்னிப்பு முறையை ஒழிக்கச் சொல்வதா? பாதிரியார்கள் பிரதமருக்கு மனு!
பாவமன்னிப்பு முறையை ஒழிக்கச் சொல்வதா? பாதிரியார்கள் பிரதமருக்கு மனு!

தேவாலயங்களில் பாவ மன்னிப்பு கேட்கும் முறையை ஒழிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளதற்கு, கேரள பாதிரியார்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் அம்மாநிலத்தை சேர்ந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் பாதிரியாராக உள்ளனர். இந்நிலையில் சர்ச் நிர்வாகத்துக்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாகியது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்த ஆடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் அதை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து இவ்விவகாரத்தில் தீர்வு காண தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா உத்தரவிட்டார். நான்கு பாதிரியார்களில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். மற்ற 2 பாதிரியார்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. 

இந்நிலையில் தங்களது விசாரணையை முடித்த தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா "ஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணால் தன் அந்தரங்க வாழ்கை குறித்து பாதிரியாரிடம் எப்படி பகிர்ந்துக் கொள்ள முடியும்? பாவமன்னிப்பு பெண்களை மட்டும் பாதிக்காது. ஆண்களின் வாழ்கையையும் பாதிக்கும். பாவ மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி மிரட்டும் சூழ்நிலை ஆண்களுக்கும் நேரலாம். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பாதிரியார்கள், ஆண்களிடம் இருந்து பணம் பறிப்பார்கள்" என தெரிவித்திருந்தார்.

இது குறித்து மேலும் பேசிய ரேகா சர்மா " மதநம்பிக்கைகள் பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக செல்லும் பட்சத்தில் அதில் நிச்சயம் மாற்றம் மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக ஆணுக்கு முன்பு, பாவ மன்னிப்பு என்பது கூடவே கூடாது. எனவே, பாவ மன்னிப்பு கேட்கும் முறையை சர்ச்சில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும்’ என தெரிவித்தார்.

(ரேகா சர்மா)

இதையடுத்து கேரள பாதிரியார்கள் கவுன்சில், பிரதமர் மோடிக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த லத்தின் ஆர்ச் டயோசிஸின் பேராயர் சூசை பாக்கியம் கூறும்போது, ’பாவமன்னிப்புக் கூடாது என்று தேசிய மகளிர் ஆணையம் எங்களுக்கு கட்டளையிட முடியாது. அந்த ஆணையத்தின் அறிக்கை சிறுபான்மையினர் மத்தியில் பதட்டத்தையும் மத அமைதியின்மையை உருவாக்குவதாக உள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்திலும் உள்ளது. ரேகா சர்மாவின் பரிந்துரை பொறுப்பற்றத் தன்மை யுடன் இருக்கிறது. அதை ஏற்கக் கூடாது என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறோம்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com