இதுதொடர்பான அந்த வீடியோவில், வாடகை காரைத் தேர்ந்தெடுத்த பெண் ஒருவர் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும் எனக் கூறுகிறார். ’அந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமெனில் ரூ.100 கட்டணம் வேண்டும்’ என ஓட்டுநர் கேட்கிறார். அதற்கு அந்தப் பெண், ’தனது உறுதி செய்யப்பட்ட பயணத்திற்கு ரூ.95 கட்டணம் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இருவருக்கும் இடையே நடைபெறும் வாக்குவாதத்தையும் அந்தப் பெண்ணே வீடியோ எடுக்கிறார். இதனை வாகன ஓட்டுநர் கவனித்ததும் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. ஒருகட்டத்தில், ஓட்டுநர் குரலை உயர்த்திப் பேசுகிறார். ’குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடுவதற்கு தனக்கு ஒன்றும் பிரச்னையில்லை’ என ஓட்டுநர் கூற, ’தேர்ந்தெடுத்த இடத்தில் இறக்கி விடு’ என அந்தப் பெண் வலியுறுத்துகிறார்.
இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம்: புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு!
சரியான இடம் எது என தெளிவுப்படுத்தும்படி ஓட்டுநர் பலமுறை வலியுறுத்த, வாக்குவாதம் தொடர்கிறது. இந்த வாக்குவாதத்தில், ’கார் கூடுதலாக சென்றால், நீங்கள் கூடுதல் பணம் அளிக்க வேண்டும்’ என ஓட்டுநர் தொடர்ந்து கூறுகிறார். ஆனால், அதைக் கேட்கும் அந்த பெண் அமைதியடையவில்லை. தொடர்ந்து உரையாடல் நீள்கிறது. எனினும், இறங்க வேண்டிய இடத்தில் பெண்ணை ஓட்டுநர் இறக்கிவிட்டுள்ளார். அந்த வாகன ஓட்டுநர் பணியாற்ற கூடிய இன்டிரைவர் என்ற நிறுவனம், சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என தெரிவித்துள்ளது.
இதுபற்றி தனிப்பட்ட முறையில் தங்களிடம் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும், இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இருதரப்புக்கும் ஆதரவாகக் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். ’குறைந்த அளவு பணத்திற்காக பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திக்கொள்வது என்பது சரியல்ல’ எனவும், ’வாடிக்கையாளர்கள் சில தருணங்களில் இறக்கிவிட வேண்டிய சரியான இடம் பற்றிய தகவலை அளிப்பதில்லை’ எனவும், ’ரூ.5 பணத்திற்காக இருவரும் இந்தளவுக்கு சண்டையிட்டுக்கொள்ளக் கூடாது’ எனப் பலவாறு அதில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த சம்பவம் எங்கே நடந்தது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிக்க: ஐசிசியின் புதிய விதிமுறை: நாளைய போட்டியில் சோதனை முயற்சியில் அமல்!