வெஜ்க்கு பதில் Non-Veg பீட்சா டெலிவரி - உணவு நிறுவனத்திடம் 1 கோடி நஷ்ட ஈடு கேட்ட உ.பி பெண்

வெஜ்க்கு பதில் Non-Veg பீட்சா டெலிவரி - உணவு நிறுவனத்திடம் 1 கோடி நஷ்ட ஈடு கேட்ட உ.பி பெண்
வெஜ்க்கு பதில் Non-Veg பீட்சா டெலிவரி - உணவு நிறுவனத்திடம் 1 கோடி நஷ்ட ஈடு கேட்ட உ.பி பெண்

நான்-வெஜ் பீட்சா டெலிவரி செய்ததால் உணவு நிறுவனத்திடம் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு உத்தரபிரதேச பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் தீபாலி தியாகி. இவர் 2019ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி ஹோலி பண்டிகையை முடித்துவிட்டு மிகவும் பசியாக இருந்ததால் குடும்பத்திற்கே சேர்த்து ஒரு அமெரிக்கன் ரெஸ்டாரண்டில் சைவ பீட்சாவை ஆர்டர் செய்திருந்தார். அரைமணிநேரம் தாமதமாக வந்த பீட்சாவை பிரித்து சாப்பிட்டபோது அது அசைவம் என்று தெரியவந்துள்ளது.

தீவிர சைவப்பிரிவைச் சேர்ந்த அந்த பெண் இதுகுறித்து புகார் எழுப்பியிருக்கிறார். தீபாலியின் வக்கீல் உடனடியாக கஸ்டமர் கேருக்கு அழைத்து இதுகுறித்து பேசியிருக்கிறார். ஆனால் அங்கிருந்து சரியான பதில் வரவில்லை. ஒருவாரம் கழித்து அந்த உணவு நிறுவனத்தின் மாவட்ட மேனேஜர் தொடர்புகொண்டு, குடும்பத்திற்கே இலவச பீட்சா தருவதாகக் கூறியிருக்கிறார்.

ஆனால் தீபாலியின் குடும்பமோ இது சாதாரண விஷயமல்ல என்றும், பிறந்ததிலிருந்து காப்பாற்றி வந்த தனது வழக்கம் மற்றும் பாரம்பரியத்தை தன்னால் காப்பாற்ற முடியாததால், தங்கள் குடும்பத்தை சுத்திகரிக்க மதிப்புமிக்க யாகங்களை செய்ததால் பல லட்சம் செலவாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், தங்கள் தவறை மறைக்க இலவச பீட்சா தருவதாகக் கூறுவது மிகப்பெரிய அவமானம் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்த தீபாலி, தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி, மனதளவில் துன்புறுத்தியதற்காக நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதை விசாரித்த டெல்லி மாவட்ட நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் இதுகுறித்து மார்ச் 17ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com