பெண்ணை கடத்தி ஓடும் காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை!
பெண்ணை கடத்தி ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்து அவரை தூக்கி வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், தனது உறவினரைப் பார்ப்பதற்காக ஹரியானாவில் உள்ள சோஹ்னாவுக்கு வந்தார். பின்னர் ஊருக்கு செல்ல இருந்த அவரை நேற்று இரவு மாருதி ஸ்விப்ட் காரில் வந்த ஒரு கும்பல் கடத்தியது. ’சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம்’ என்று கூறிவிட்டு, அந்த கும்பல் ஒருவர் பின் ஒருவராக, மாறி மாறி அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது. தன்னை விட்டுவிடும் படி அந்தப் பெண் கெஞ்சினார். பின்னர் கிரேட்டர் நொய்டா அருகில் காரில் இருந்து அவரை தூக்கி வீசிவிட்டு குடும்பல் தப்பிச் சென்றுவிட்டது.
பலத்த காயத்துடன் கிடந்த அந்தப்பெண் பற்றி இன்று காலை சாலையில் சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹரியானா போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே 29-ம் தேதி பெண் ஒருவர் குருகிராம் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த பகுதியில் இந்த சம்பவமும் நடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.