இறுதி சடங்குக்கு பணமில்லை: மகனின் உடலை தானம் செய்த ஏழை அம்மா!
இறுதிச் சடங்கு செய்வதற்கு பணமில்லாததால், இறந்த மகனின் உடலை மருத்துவமனைக்கு தானமாகக் கொடுத்துள்ளார் ஏழைத் தாய் ஒருவர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்டார் பகுதியைச் சேர்ந்தவர் பாமன். கடந்த 15-ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இவர் பலத்தக் காயமடைந்தார். உடனடியாக, ஜக்தல்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கிருந்து உடலைக் கிராமத்துக்கு கொண்டு செல்லவோ, இறுதிச் சடங்கு செய்யவோ, பாமனின் அம்மாவுக்கு வசதியில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தார். அவரது உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்களின் நிலையைக் கண்ட மருத்துவமனையின் பிணவறை பொறுப்பாளர் மங்கள் சிங் என்பவர், ‘அப்படியென்றால் உடலை மருத்துவமனைக்குத் தானமாகக் கொடுங்களேன்’ என்று கேட்டாராம். இதையடுத்து அவர்கள் கொடுத்துவிட்டு தங்கள் கிராமத்துக்குச் சென்றுவிட்டனர்.
இதுபற்றி இறந்துபோன பாமனின் உறவினர் ஒருவர் கூறும்போது, ‘நாங்கள் ஏழைகள். உடலை ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்ய கூட வசதியில்லை. யாருமே உதவி செய்யவும் முன்வரவில்லை. அந்த நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் உடலை தானமாகக் கேட்டதால் கொடுத்துவிட்டார் அவர் அம்மா’ என்றார்.