வீறுகொண்ட சிங்கங்களாக காங்கிரஸ் எம்பிக்கள் போராடுவார்கள் - ராகுல் காந்தி
காங்கிரசின் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீறு கொண்ட சிங்கங்களாக பாரதிய ஜனதாவுடன் போராடுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. இதையடுத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அவரை தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்குமாறு அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதற்குப்பின் பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சியாக அச்சமின்றி தனது கடமைகளை காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் என்றார். பாரதிய ஜனதா தனது திட்டங்களை அவ்வளவு எளிதில் நிறைவேற்றிவிட முடியாது என்றும் அவர் பேசினார்.
வெற்றி பெற்ற 52 காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுடன் மட்டும் போட்டியிடவில்லை என்றும் அவர்களுக்கு எதிராக நின்ற அரசு அமைப்புகளுடனும் போட்டியிட்டுள்ளார்கள் என்றும் பேசிய ராகுல், சுதந்திர இந்தியாவில் இது போன்ற சூழல் ஏற்பட்டது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.