“மத்தியப் பிரதேசத்தில் தான் நான் இறப்பேன்”- சிவராஜ் சிங் சவுகான்
மத்தியப் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கேதான் இறப்பேன் என முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி கண்டது. பாஜக 109 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 116 தொகுதிகள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆனால் 2 இடங்களில் வெற்றி கண்ட பகுஜன் சமாஜ், 1 இடத்தில் வெற்றி பெற்ற சமாஜ் வாதி ஆகியவை காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே முதல்வர் தேர்வில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அநேகமாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் ம.பி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் விவசாயிகளின் துயரங்களை முடிவுக்கு கொண்டுவர ஆசைப்பட்டதாக பேசிய அவர், 15 ஆண்டுகாலம் பாஜக ஆட்சி செய்ய ஆதரவு தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மாநில அரசியலில்தான் தீவிரமாக ஈடுபடுவேன். மத்திய அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை என்ற அவர் மத்தியப் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கேயே இறப்பேன் எனவும் கூறினார். மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து பாதுகாப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.