புதைச்சாங்களா, எரிச்சாங்களா? உதாரணத்துக்கு வந்த ஜெயலலிதா!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகிலுள்ளது இந்திராபுரம். இங்கு வசிப்பவர் துளசி கவுர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவரது மனைவி ஷீலா கவுர். வயது 66. கடந்த சில நாட்களுக்கு முன் ஷீலா உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இவரை தனது வீட்டின் வாசலில் அடக்கம் செய்ய, துளசி கவுர் முடிவெடுத்தார். இதற்கு அக்கம் பக்கத்து வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காசியாபாத் மேம்பாட்டுக் கழகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து துளசி கவுர் வீட்டுக்கு அதிகாரிகள் போலீசுடன் வந்தனர். கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரீத்தி ஜெய்ஸ்வாலும் வரவழைக்கப்பட்டார்.
அப்போது ‘இந்த வீடு என் மனைவி பெயரில் இருக்கிறது. இங்கு புதைக்கப்பட வேண்டும் என்பது என் மனைவியின் விருப்பம். அதன் அடிப்படையிலேயே அவரை இங்கு புதைக்கிறோம்’ என்றார் துளசி கவுர்.
அக்கம் பக்கத்து வீட்டினர், ’இந்துக்கள் உடலை புதைப்பதில்லை, எரிக்கத்தான் செய்வார்கள். அதனால் அவர் மனைவியை இங்கு புதைக்கக் கூடாது’ என்றனர். அப்படி புதைத்தால் உடலை தோண்டி எடுப்போம் என்று சிலர் கூறினர்.
அப்போது, ’தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்துதான். அவரை புதைக்கத்தான் செய்தார்கள். எரிக்கவா செய்தார்கள்?’ என்று துளசி கவுருக்கு ஆதரவாக அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர். மேலும் ‘அந்த வீடு, ஷீலா கவுர் பெயரில் இருக்கிறது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம்’ என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.