ஜார்கண்டில் 50 வயது பெண், மூன்று இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவரது பிறப்புறுப்புக்குள் ஸ்டீல் டம்ளர் திணிக்கப்பட்டதாகவும் போலீஸார் கூறுகின்றனர். இந்தக் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பு வெளியிட்ட தகவல்: ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டம் கோப்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 50 வயதான இவர், கணவரை இழந்த நிலையில், தனியாக அந்தக் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று ரேணுகாவின் வீட்டிற்குள் புகுந்த அதே பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள், அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இறுதியில், அவரது பிறப்புறுப்பில் ஒரு ஸ்டீல் டம்ளரை திணித்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் ரேணுகாவிற்கு அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். இதையடுத்து, ரேணுகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ரேணுகாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அலுவலர் கூறியுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களில் இருவரான வேத்ராம் மற்றும் ஜஸ்பால் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். இன்னொருவர் தப்பிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் சாமி கும்பிட வந்த 50 வயது பெண்ணை, துடிக்கத் துடிக்க பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பிறப்புறுப்பில் இரும்பு உலோக துண்டையும் செருகி கொன்ற சம்பவமே அடங்காத நிலையில், அதுபோலவே மற்றொரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.