“பிரதமர் சீனா என குறிப்பிடுவதில்லையே, ஏன் தயக்கம் ?” - ப.சிதம்பரம் கேள்வி
பிரதமர் தனது உரையில் எங்குமே சீனா என்று குறிப்பிடுவதில்லையே, ஏன் இந்த தயக்கம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?
இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா?. பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, லடாக்கின் லே பகுதியில் உள்ள நிமு என்ற இடத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி, எல்லைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். பிரதமருடன் முப்படைத் தளபதி பிபின் ராவத்தும் லடாக் பயணம் மேற்கொண்டார். ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள் மற்றும் இந்தோ-திபெத் எல்லைப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும், வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது என தெரிவித்தார்.

