டெல்லியில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவருடைய பேச்சு பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, "ஆட்சியில் உள்ளவர்கள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீனாவின் பெயரைச் சொல்வதற்குக்கூட ஏன் பயப்படுகிறார்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப், நாட்டைப் பாதுகாக்கவும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளவும் இந்த சுதந்திர தினத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறது என்று அனைத்து இந்தியர்களும் அரசிடம் கேட்கவேண்டும் எனவும், ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும், ஒவ்வொரு இந்தியரும் இந்திய ராணுவத்தை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மைதானத்தில் பேசிய பிரதமர் மோடி, "இந்திய இறையாண்மைக்குச் சவால்விட்டவர்களுக்கு மிகப் பொருத்தமான பதிலை இந்திய வீரர்கள் அளித்தார்கள்" என்று சுட்டிக்காட்டினார். சீனாவின் பெயரைக் குறிப்பிடாத அவர், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ளதாக தெரிவித்தார்.