கிடுக்கிப்பிடி போடும் WhatsApp.. இனி நீங்க Use பண்ண முடியாதா? அதிரடியாக வந்த புது ரூல்ஸ்?
இந்திய பயனர்களிடம் பிறந்த தேதியை கேட்கும் வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, இது வரவிருக்கும் இந்திய அரசு விதிமுறைகளுடன் தொடர்புடையதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால் வாட்ஸ்அப் அல்லது இந்திய அரசு எந்த புதிய வயது சரிபார்ப்பு கொள்கையையும் அறிவிக்கவில்லை. இது சோதனை முயற்சியா, வழக்கமான கணக்கு புதுப்பிப்பா என்பது தெளிவாகவில்லை.
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஸ்கிரீன்ஷாட்களில், சில பயனர்களிடம் பிறந்த தேதியை உள்ளிடுமாறு வாட்ஸ்அப் கேட்பதாகவும், இது 'வரவிருக்கும் இந்திய அரசு விதிமுறைகள்' தொடர்பானது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்கிரீன்ஷாட்களை முதலில் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அபிஷேக் யாதவ், இதன் மூலம் புதிய விவாதத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில், இந்தியா மெசேஜிங் மற்றும் சமூக வலைதளங்களில் இளம் பயனர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கப் போகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால், வாட்ஸ்அப் அல்லது இந்திய அரசு இதுவரை வயது சரிபார்ப்பு தொடர்பான புதிய கொள்கை எதையும் அறிவிக்கவில்லை. எனவே, இந்த அறிவிப்பு ஒரு வரையறுக்கப்பட்ட சோதனையா, வழக்கமான கணக்கு புதுப்பிப்பா அல்லது புதிய விதிமுறைகளுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகவில்லை.
வாட்ஸ்அப் ஏற்கனவே சில சூழல்களில் பயனர்களின் வயது தொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறது. பதிவு செய்யும் போது அல்லது சில சேவைகளை பயன்படுத்தும் போது வயதை உறுதிப்படுத்துமாறு பயனர்களிடம் கேட்கப்படலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் சட்ட விதிகளை பின்பற்றவும், வயதுக்கு ஏற்ற சேவைகளை வழங்கவும் உதவுகின்றன.
மேலும், வயது தகவல்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள், சேவை விதிமுறைகளை அமல்படுத்துதல் மற்றும் சில மெட்டா ஏஐ சேவைகளுக்கான அணுகலை நிர்ணயிப்பதிலும் பயன்படுத்தப்படலாம்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்புக்காக வயது சரிபார்ப்பு விதிகளை வலுப்படுத்தியுள்ளன. இந்தியாவும் எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால், வாட்ஸ்அப் மட்டுமின்றி டெலிகிராம், சிக்னல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல தளங்களும் பாதிக்கப்படலாம்.
தற்போது, இந்த அறிவிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை உறுதியான புதிய விதிமுறை என கருத முடியாது.

