லெவல் கிராசிங்குகள் அனைத்தையும் ஆள் உள்ளதாக மாற்றுதல், விபத்து பாதிப்புகளை குறைக்கும் LHB பெட்டி என பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் DRDO அமைப்பு ரயில் மோதல்களை தவிர்ப்பதற்கான கவச் என்ற அதிநவீன மின்னணு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
ரயில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி சென்றாலோ, சிக்னலை மீறி சென்றாலோ தானியங்கி முறையில் தாமாகவே பிரேக் போட்டு ரயிலை நிறுத்துவதே கவச் தொழில்நுட்பமாகும். இந்த கவச் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரிசோதித்து பார்க்கப்பட்டது.
முதலில் டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கத்தா பாதையில் ஓடும் ரயில்களில் இந்த வசதியை பொருத்த முடிவெடுக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக மற்ற பாதைகளிலும் இதை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடெங்கும் எல்லா ரயில்களிலும் இந்த வசதியை ஏற்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் ஒடிசாவில் ரயில்கள் மோதி சோக நிகழ்வு நடந்துள்ளது. இந்த வழி தடத்தில் இன்னும் இந்த தொழில்நுட்பம் கொண்டு வரப்படவில்லை.