வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கிய கணவர்... காப்பாற்ற முயன்ற நடிகைக்கு நேர்ந்த கொடுமை!

வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கிய கணவர்... காப்பாற்ற முயன்ற நடிகைக்கு நேர்ந்த கொடுமை!
வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கிய கணவர்... காப்பாற்ற முயன்ற நடிகைக்கு நேர்ந்த கொடுமை!

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில், வழிப்பறி கொள்ளையை தடுக்க முயற்சித்த நடிகை ரியா குமாரி என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநில நடிகை ரியா குமாரி என்பவர், தனது கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ்குமாருடன் இணைந்து, தங்களின் இரண்டு வயது மகளுடன் தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கி காரில் சென்றுள்ளனர்.

நேற்று காலை 6 மணியளவில் பாக்னன் காவல் நிலைய பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே பிரகாஷ்குமார் காரை நிறுத்தி ஓய்வெடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவரைத் தாக்கி, அவரது பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து மர்ம கும்பலிடம் இருந்து தனது கணவரை ரியா குமாரி மீட்க முயன்றுள்ளார். அப்போது அந்த மர்ம கும்பல் ரியா குமாரியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பிரகாஷ்குமார் தனது மனைவியை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு உதவி தேடி சுமார் 3 கி.மீ. குல்காச்சியா - பிர்டாலாவில் நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்த உள்ளூர்வாசிகள் பிரகாஷ்குமார், தனது மனைவியை உலுபெரியாவில் உள்ள எஸ்.சி.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவியுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நடிகையின் கணவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் வந்த காரை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கணவரை காக்க வேண்டி, வழிப்பறிக்கு எதிராக போராடிய பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com