நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி நாளை பதவியேற்கிறார். இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பதிலளித்துள்ள மம்தா, “வாழ்த்துகள் புதிய பிரதமர் நரேந்திர மோடிஜி. உங்கள் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் கடந்த ஒரு மணி நேரமாக, 54 பேர் மேற்கு வங்கத்தில் அரசியல் கலவரத்தில் கொலை செய்யப்பட்டிருபதாக பாஜகவினர் சிலர் சமூக வலைத்தளங்களில் தகவலை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் உண்மையில்லை. மேற்கு வங்கத்தில் அரசியல் கொலை எதுவுமே நடக்கவில்லை. அந்த மரணங்கள் தனிப்பட்ட காரணங்களாலும், குடும்ப பிரச்னைகளாலும், பிற காரணங்களினாலும் நிகழ்ந்தவை. அதற்கு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கு எங்களிடம் ஆதராம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அத்துடன், ‘அதனால், என்னை மன்னித்துவிடுங்கள் மோடிஜி, என்னால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. இந்தப் பதவியேற்பு விழா ஜனநாயகத்திற்கான சந்தர்ப்பம், இதை எந்த ஒரு கட்சியும் அரசியலாக பயன்படுத்த வாய்ப்பளிக்க கூடாது. தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.