இந்தியாவில் எந்தவொரு செல்போன் சேவை நிறுவனமும் மூடப்படக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனால் அந்நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதற்கிடையில் வோடாஃபோன் நிறுவனம் கடும் நிதி சிக்கலில் இருப்பதாகவும் அது தனது சேவையை நிறுத்தும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தியாவில் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழில் செய்வது சவாலான விஷயமாக உள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த வோடஃபோன் நிறுவனத் தலைவர் நிக் ரீட் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தியாவில் சுமார் 30 சதவிகித சந்தை பங்களிப்புடன் 3-ஆவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக வோடஃபோன் நிறுவனம் உள்ளது. இருப்பினும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அந்நிறுவனத்திற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.